குற்றம்

திருவேற்காடு: முட்புதரில் மறைத்துவைத்து மதுபானம் விற்பனை செய்த இருவர் கைது

kaleelrahman

திருவேற்காட்டில் முட்புதரில் மறைத்துவைத்து மதுபானம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கொரோனா தாக்கம் காரணமாக தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. இரண்டு வாரத்திற்கு மேலாக மதுபான கடைகளும் மூடப்பட்டுள்ளதால் மதுக்குடிப்போர் கள்ளச்சந்தையில் மது பானங்களை தேடி திரிவதும் வெளிமாநிலங்களில் இருந்து மதுபானங்களை கடத்தி வந்து விற்பனை செய்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த நிலையில் திருவேற்காடு பகுதியில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக உதவி கமிஷனர் சுதர்சனத்துக்கு வந்த தகவலையடுத்து திருவேற்காட்டை அடுத்த அயனம்பாக்கம் பகுதியில் சோதனை செய்தனர். அப்போது சிலர் மதுபானங்களை வாங்கிச் சென்றனர். அவர்களிடம் விசாரித்தபோது முட்புதரில் மறைத்து வைத்து மதுபானம் விற்பனை செய்வதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அங்கிருந்த பார்த்திபன் (32), கண்ணன் (38), ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை செய்ததில், அருகில் உள்ள முட்புதரில் மதுபானங்களை பெட்டிகளில் மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து 20 பெட்டிகள் நிறைய சுமார் 1000 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இவர்கள் மதுபானங்களை எங்கிருந்து வாங்கி வந்து விற்பனை செய்தனர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.