ஜோதிபாசு pt desk
குற்றம்

நண்பரை கொன்றுவிட்டு சினிமா பாணியில் நாடகமாடிய இளைஞர் - விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

webteam

செய்தியாளஎர்: ஆர்.மோகன்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பில்லா விடந்தை கிராமத்தைச் சேர்ந்த டிரைவர்கள் ஜெரால்டு (24), ஜோதிபாசு (32). நண்பர்களான இருவரும் கடந்த 9ஆம் தேதி மாலை மதுவில் விஷ மருந்தை கலந்து குடித்து விட்டதாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அன்று இரவே ஜெரால்டு உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பெரம்பூர் போலீசார் ஜோதிபாசுவிடம் விசாரணை செய்தபோது தன்னிடம் சண்டையிட்ட தன் மனைவி தன்னை பிரிந்து சென்று விட்டதாகவும் விரக்தியில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார். மேலும் அச்சமயத்தில் அங்கு வந்த ஜெரால்டு விஷம் கலந்த மதுபானத்தை, விஷம் கலந்தது தெரியாமல் குடித்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

இறந்த ஜெரால்டு

இதைத் தொடர்ந்து ஜோதிபாசு, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், பெரம்பூர் போலீசார் 194 இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விஷம் கலந்த மது அருந்திய நண்பர்கள் நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்பட்டதால் நண்பர்கள் இருவருக்கும் முன்விரோதம் உள்ளதா? ஜெரால்டு உயிரிழப்பிற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். 10ஆம் தேதி மாலை பிரேத பரிசோதனை செய்யப்பட்ட ஜெரால்டு உடலை பெற்றுச் சென்ற உறவினர்கள், செம்பனார்கோவில் அருகே கடலி சாலையில் 11ஆம் தேதி மதியம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கணவரை பிரிந்து வாழும் ஒரு பெண்ணுடன் ஜெரால்டு, ஜோதிபாசு ஆகிய இருவருக்கும் பழக்கம் இருந்தது தொடர்பாக முன்விரோதம் இருந்ததால் ஜோதிபாசு திட்டமிட்டு மதுவில் விஷத்தை கலந்து ஜெரால்டுக்கு கொடுத்து கொலை செய்துள்ளார் என்று குற்றம்சாட்டிய உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து ஜோதிபாசுவை கைது செய்ய வேண்டும் என போரராட்டம் நடத்தினர்.

நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஜோதிபாசுவிடம் விசாரிக்க வேண்டும் என்று திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்ற போது அவர் சிகிச்சை முடிந்து சென்று விட்டதாக தெரிவித்துள்ளனர்.

Road blocked

இதைத் தொடர்ந்து ஜோதிபாசுவை பிடித்து பெரம்பூர் காவல்நிலையம் கொண்டு சென்று போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

விசாரணையில் தெரியவந்தவை:

ஜோதிபாசு, திருமணம் செய்யாமலே ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வந்துள்ளார். கணவன், மனைவியாக வாழ்ந்த அவர்களுக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளதாக தெரிகிறது. அப்பெண், சமீபத்தில் ஜோதிபாசுவை பிரிந்து குழந்தைகளுடன் கோயம்புத்தூருக்கு வேலைக்கு சென்றிருகிறார்.

இதற்குப்பின் கணவனை பிரிந்து வாழ்ந்த வேறொரு பெண்ணுடன் ஜோதிபாசுவுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. அடிக்கடி அப்பெண்ணுடன் பேசி வந்திருக்கிறார் ஜோதிபாசு. அப்படி ஒருநாள் தனது செல்போனில் சார்ஜ் இல்லை என்பதால் ஜெரால்டு போனை வாங்கி அந்தப் பெண்ணுடன் ஜோதிபாசு பேசியுள்ளார். இதை பயன்படுத்திக் கொண்ட ஜெரால்டு, தன் செல்போனில் இருந்த அந்த பெண்ணின் நம்பருக்கு அடிக்கடி தானும் போன் செய்து பேசி காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

இதனையறிந்து ஆத்திரமடைந்த ஜோதிபாசு, ஜெரால்டை கொலை செய்ய முடிவு செய்து மது வாங்கி அதில் விஷத்தை கலந்து வைத்துள்ளார். பின் ஜெரால்டுக்கு அதை கொடுத்துவிட்டு, தான் தொடர்பிலிருந்த பெண்ணுக்கு ஃபோன் செய்து “ஜெரால்டு அதை குடித்துவிட்டான். இனி தொல்லை இல்லை” என்றுள்ளார்.

சூனா பானா காமெடி டெக்னிக்!

நடிகர் வடிவேலு படத்தில் வரும் சூனா பானா காமெடி டெக்னிக்கை பயன்படுத்தி, ‘என் மனைவி என்னை பிரிந்து சென்று விட்டதால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்ள மதுவில் விஷம் கலந்து வைத்திருந்தேன். அதை ஜெரால்டு தவறுதலாக எடுத்துக் குடித்து விட்டார்’ என்று நாடகமாடியது இதன்மூலம் அம்பலமாகியுள்ளது. அனைவரும் சந்தேகப்படக் கூடாது என்பதற்காக விஷம் கலந்த மதுவை தானும் சிறிது குடித்துவிட்டு தப்பிப்பதற்காக வாந்தி எடுத்ததும் தெரியவந்தது.

Police station

அடுத்தடுத்து தெரியவந்த இந்த அதிர்ச்சி தகவல்களை அடுத்து, ஜோதிபாசு மற்றும் அவருடன் தொடர்பிலிருந்த பெண், ஜெரால்ட் ஆகியோரின் செல்போன்களை கைப்பற்றி ஆய்வுசெய்தனர். தொடர்ந்து ஜெரால்டு கொலை செய்யப்பட்டதை உறுதிப்படுத்திய போலீசார், கொலை வழக்காக இதை மாற்றம் செய்து ஜோதிபாசுவை செம்பனார்கோயிலில் உள்ள தரங்கம்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மயிலாடுதுறை கிளை சிறையில் அடைத்தனர்.