குற்றம்

மருத்துவமனை பெண் ஊழியரை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபர் கைது

webteam

திருக்கோவிலூரில் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற ஆட்டோ ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள மருத்துவமனையொன்றின் பெண் ஊழியரை, திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் வட்டம் மதுராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் (23) என்பவர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். இவர் நேற்று முன்தினம் அப்பெண் ஊழியர் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்கையில், தன் ஆட்டோவில் அவரை ஏற்றி சென்றுள்ளார் என சொல்லப்படுகிறது.

தன் ஆட்டோவில் அப்பெண்ணுடன் பயணிக்கையில், இருட்டான பகுதிக்கு சென்று, அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து அங்கிருந்து தப்பியோடிய அந்தப் பெண் தனது தாய்க்கு தகவல் தெரிவித்துள்ளார். உறவினர்கள் அந்தப் பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதுகுறித்து பெண்ணின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த விஜயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.