குற்றம்

பட்டப் பகலில் அரிவாளால் வெட்டிய கும்பல் - கோவையில் பரபரப்பு

webteam

கோவை அவினாசி சாலையில் பட்டப் பகலில் இருச்சக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் முன்விரோதம் காரணமாக இரண்டு இளைஞர்களை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கணபதி பழைய சக்தி சாலை காமராஜர் நகரைச் சேர்ந்தவர்கள் பிரதீப் மற்றும் தமிழ்வாணன். இவர்கள் இருவரும் கொலை முயற்சி வழக்கிற்காக கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வந்தனர். இந்த நிலையில் இன்று இருவரும் வழக்கம்போல கையெழுத்திட்டுவிட்டு அவினாசி சாலையிலுள்ள சிஎஸ்ஐ சர்ச் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை பின்தொடர்ந்து இருச்சக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளைக் கொண்டு சரமாரியாக தாக்கி தப்பிச் சென்றுவிட்டனர். அதில் இளைஞர்கள் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு நிலைத்தடுமாறி மயங்கி கீழே விழுந்தனர். 

இதையடுத்து தகவலறிந்து வந்த பந்தய சாலை போலீசார் இருவரையும் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக உதவி ஆணையாளர் எழிலரசு மற்றும் பந்தய சாலை காவல் ஆய்வாளர் தெய்வசிகாமணி தலைமையிலான மூன்று தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக சதீஷ் ,ஹரி, தனபால் ,சூர்யா ஆகியோரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பட்டப்பகலில் பரபரப்பான சாலையில் நடைபெற்ற இந்தச் சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னதாக காலை முதலே இந்தக் கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிவதாக பொதுமக்கள் சிலர், காவல்துறையிடம் தெரிவித்து உள்ளனர். ஆனால் உடனடியாக நடவடிக்கை எடுத்து இருந்தால் இந்தச் சம்பவத்தை தடுத்து இருக்கலாம் எனப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.