குற்றம்

இரிடியம் இருப்பதாக போலி கலசத்தை ரூ. 1 கோடிக்கு விற்க முயற்சி.. 11 பேர் கொண்ட கும்பல் கைது!

kaleelrahman

விருதுநகரில் இரிடியம் இருப்பதாக போலி கலசத்தை விற்க முயன்ற  11 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்

விருதுநகர் பஜார் காவல்நிலையம் அருகேயுள்ள தனியார் விடுதியில் ஒரு கும்பல் சட்டவிரோதமாக இரிடியத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்ய உள்ளதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து விருதுநகர் துணை காவல் கண்காணிப்பாளர் அருணாசலம் தலைமையிலான காவல்துறையினர் தனியார் விடுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.


அப்போது 11 பேர் கொண்ட கும்பல் இரிடியத்தை பதுக்கி வைத்து பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய முயற்சி செய்தது தெரியவந்தது. தொடர்ந்து 11 பேர் கொண்ட கும்பலை அதிரடியாக கைது செய்த காவல்துறை அவர்கள் பதுக்கி வைத்திருந்த 3 கிலோ எடை கொண்ட இரிடிய கலசம் மற்றும் 4 சொகுசு கார்களை பறிமுதல் செய்தனர்.


இது குறித்து வழக்குப்பதிவு செய்த ஆமத்தூர் காவல்நிலைய போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட நபர்கள் பெங்களூர், ஹைதராபாத், நாகர்கோவில், நெல்லை, தூத்துக்குடி, திண்டுக்கல், தேனி மாவட்டங்களை சேர்ந்த ராம்பிரசாத், கணேஷ், பொன்னரசு, ஜோசப் கென்னடி, கருப்பசாமி, கருப்பையா, வினோஜ், சதீஸ், குப்புசாமி என்பது தெரியவந்தது.

இவர்கள் தேனி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பாப்பாத்தி அம்மன் கோவிலில் உள்ள கலசத்தை அதே பகுதியை சேர்ந்த குப்புசாமி என்பவரது உதவியோடு திருடி 1 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய விருதுநகர் கொண்டு வந்ததும் தெரியவந்தது.

கலசத்தில் இரிடியம் உள்ளதா என்பது குறித்து தடயவியல் நிபுணர்கள் நடத்திய ஆய்வில் இரிடியம் இல்லை என்பதும் இரிடியம் இல்லாத போலியான கலசத்தை மோசடியாக விற்பனை செய்ய முயற்சித்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இதனிடையே இந்த கும்பலுடன் தொடர்புடைய வேறு யாரும் உள்ளார்களா என்பது குறித்தும் காவல்துறை விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது