குற்றம்

’குடித்துவிட்டு தகராறு’ மகனை விட்டு கண்டித்ததால் மனைவியின் தலையில் கல்லை போட்ட கணவன்

’குடித்துவிட்டு தகராறு’ மகனை விட்டு கண்டித்ததால் மனைவியின் தலையில் கல்லை போட்ட கணவன்

kaleelrahman

வளசரவாக்கத்தில் குடிபோதையில் தகராறு செய்த தந்தையை மகன் கண்டித்ததால் ஆத்திரத்தில் மனைவியின் தலையில் கல்லை போட்ட கணவர் கைது.

சென்னை வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம் ஆண்டவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (58), இவரது மனைவி கங்கா (55), இவர்களது மகன் பாலசுப்பிரமணியன் (30). வேலைக்குச் செல்லும் முருகன் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதனால் தனது மகனிடம் சொல்லி தந்தையை கண்டிக்குமாறு கங்கா கூறியுள்ளார்.

இரண்டு தினங்களுக்கு முன்பு வழக்கம் போல் குடித்துவிட்டு வந்த தந்தை முருகனை, மகன் பாலசுப்ரமணியன் கண்டித்து உள்ளார். பின்னர் வேலை நிமித்தமாக பாலசுப்பிரமணியன் திருச்சிக்குச் சென்றுவிட்டார். இன்று குடிபோதையில் வந்த முருகன், மகனிடம் சொல்லி தன்னை கண்டிக்கிறாயா என மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் ஆத்திரமடைந்த முருகன் அருகில் இருந்த கல்லை எடுத்து மனைவி கங்காவின் தலையில் போட்டார். அப்போது அலறிய கங்காவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கினார். அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த கங்காவை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் இதுகுறித்து ராயலா நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வளசரவாக்கம் உதவி கமிஷனர் மகிமைவீரன், மனைவியின் தலைமீது கல்லைப் போட்டு விட்டு தலைமறைவான முருகனை கைதுசெய்து அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் ஆபத்தான நிலையில் கங்கா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குடித்து விட்டு வந்த கணவனை மகனை விட்டு கண்டிக்க வைத்த மனைவி மீது கணவனே கல்லை போட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.