குற்றம்

மனைவியுடன் வாழ விடாமல் தடுப்பதாக மாமியார் தலையில் கல்லை போட்டுக் கொலை - மருமகன் கைது

kaleelrahman

திருச்செங்கோடு அருகே மாமியார் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த மருமகன் கைது செய்யப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள கருவேப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோகிலா (40) கணவனை இழந்த கூலித் தொழிலாளியான இவருக்கு ஆர்த்தி என்ற மகளும் வசந்த குமார் என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில், ஆர்த்தியை கடந்த 3 வருடங்களுக்கு முன் லாரி பாடிபில்டிங் பட்டறையில் வேலை பார்த்து வரும் கார்த்தி என்பவர் ஒரு தலையாய் காதலித்து பிறகு கோகிலாவிடம் பெண் கேட்டு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டு மாங்குட்டை பாளையத்தில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், திருமணம் ஆன ஒரு வாரத்தில் கார்த்திக்கு ஜன்னி வந்ததால் பயந்து போன ஆர்த்தி கருவேப்பம் பட்டியில் உள்ள தாய் வீட்டிற்கு வந்து விட்டார். மனைவியை பிரிந்து மாங்குட்டைபாளையத்தில் தனியாக வசித்து வந்த கார்த்தி கடந்த 1 மாதத்திற்கு முன்பு கருவேப்பட்டியில் உள்ள மாமியார் வீட்டிற்கு பின்பக்கத்தில் குடி வந்துள்ளார்.

இதையடுத்து தனது மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்பிய கார்த்தி, மாமியார் கோகிலா தடையாக இருப்பதாக கருதி சண்டையிட்டு வந்துள்ளார். அதேபோல் நேற்று மாலை சண்டை போட்டபோது ஆர்த்தி வேலை செய்துவரும் கடைக்குச் சென்று அழைத்து வர ஆர்த்தியின் தம்பி வசந்தகுமார் சென்றிருந்தார். இந்நிலையில் மாமியார் கோகிலா தலையில் குழவிக் கல்லால் தாக்கியுள்ளார்.

இதில் கோகிலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாமியாரை கொன்றுவிட்டு வீட்டு வாசலில் கார்த்தி அமர்ந்திருந்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ஊரக போலீசார், அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த டி.எஸ்.பி சீனிவாசன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணையை முடுக்கி விட்டார். மனைவியுடன் வாழ விடவில்லை என மாமியார் தலையில் கல்லை போட்டுக் கொன்ற சம்பவம் கருவெப்பம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.