Accused pt desk
குற்றம்

குமரி: சொத்தை எழுதித் தர மறுத்த மாமியார்... கூலிப்படை வைத்து கடத்த முயன்ற மருமகன் - ஆறு பேர் கைது

webteam

செய்தியாளர்: நவ்பல் அஹமது

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாவூர் பகுதியை சேர்ந்தவர் ஜெபி சகாய மெட்டில்டா. இவர் தனது மகள் ஆஸ்மியை (27) குமரி முனை அருகே அஞ்சுகூட்டு விளை பகுதியை சேர்ந்த சுபாஷ் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இந்நிலையில் தனது மாமியார் சொத்துகளை தனது பெயருக்கு மாற்றக் கூறி மருமகன் சுபாஷ் தொடர்ந்து கட்டாயப்படுத்தி வந்துள்ளார். ஆனால், மாமியார் தனது சொத்தை எழுதிக் கொடுக்க மறுத்துள்ளார்.

knife

இதனால் ஆத்திரமடைந்த மருமகன் சுபாஷ், ‘சொத்தை எனது பெயருக்கு எழுதித் தரவில்லை என்றால் கொலை செய்து விடுவேன்’ என கொலை மிரட்டல் விடுத்துவந்துள்ளார். ஒருகட்டத்தில் தனது மாமியாரை கூலிப் படையினரை வைத்து கார் மூலமாக கடத்த முயற்சி செய்துள்ளார்.

இதற்காக அவர் அமைத்த கூலிப்படையினர், இரண்டு நாட்களாக ஜெபியின் வீட்டின் அருகே நோட்டமிட்டுவிட்டு, நேற்று அவரை கடத்த முயற்சி செய்துள்ளனர். அப்போது அவர் சத்தம் போடவே அவரை விட்டுவிட்டு காரில் தப்பிச் சென்றனர்.

தகவல் அறிந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல்துறையினர், கூலிப்படையினர் தாணு, அஜய், மகேஷ், அரவிந்த், ஸ்ரீராம் மற்றும் ஒரு சிறுவன் உட்பட ஆறு பேரை கைது செய்தனர்.

கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் மூன்று இருசக்கர வாகனங்கள், கத்தி, அரிவாள் உள்ளிட்டவைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட மருமகன் சுபாஷ் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரை கன்னியாகுமரி போலீஸார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.