குற்றம்

9 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தாயின் இரண்டாவது கணவர் கைது..!

webteam

மகள் முறை உறவு கொண்ட 9 வயது சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த, மதுரையை சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சை மாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் 30 வயது இளம்பெண்.  இவருக்கு திருமணமாகி  9 வயதில் ஒரு மகளும் நான்கு வயதில் ஒரு மகனும் உள்ளனர். இதனிடையே அவருக்கு  விவாகரத்து ஆன நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள எம் கல்லுப்பட்டி வடக்குத் தெருவை சேர்ந்த மான்சிங் என்பவர் மகன் கிறிஸ்டோபரை 2வதாக திருமணம் செய்தார்.

இவர் மதுரையில் பொறியாளராக பணியாற்றி வந்த நிலையில் அவ்வப்போது தஞ்சை வந்து சென்றுள்ளார். தற்போது தஞ்சையில் கணவனும் மனைவியும் வசித்து வந்த நிலையில், சம்பந்தப்பட்ட பெண்ணும் அவரது மகனும் வெளியே சென்றுள்ளனர். அப்போது முதல் கணவருக்கு பிறந்த மகள், டிவி பார்த்துக் கொண்டிருந்ததாகவும்,  அப்போது கிறிஸ்டோபர் அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதனை அறிந்த தாய் இது குறித்து வல்லம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் நடவடிக்கை எடுத்த காவல் ஆய்வாளர் கலைவாணி தலைமறைவான கிறிஸ்டோபரை தேடி வந்தார். இந்நிலையில் நேற்று இரவு தஞ்சைக்கு வந்த கிறிஸ்டோபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து போலீஸார் அவரை சிறையில் அடைத்தனர்.