குற்றம்

குடோனில் பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருள்கள் பறிமுதல்: இத்தனை லட்சம் மதிப்பா?

kaleelrahman

கோவில்பட்டியில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.6 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருள்கள் பறிமுதல் - 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மந்திதோப்பு சாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கோவில்பட்டி ராமையா நகரைச் சேர்ந்த சங்கநாரயணன் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்தார். அவரை வழிமறித்த போலீசார், அவரது இருசக்கர வாகனத்தில் இருந்த பைகளை சோதனை செய்தனர். அப்போது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் வ.உ.சி நகரில் குடோனில் தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து குடோனுக்கு சென்ற போலீசார், அங்கு பார்த்த போது 67 மூடைகளில் சுமார் 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருள்கள் இருப்பது தெரியவந்தது.

அதை பறிமுதல் செய்த போலீசார் புகையிலை பொருள்களை பதுக்கி வைத்திருந்து ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கேஷ்வசிங், உத்தம்சிங் மற்றும் புகையிலை பொருள்களை விற்பனைக்கு கொண்டு சென்ற சங்கரநாரயணன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு கொண்டு செல்ல பயன்படுத்திய இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.