குற்றம்

செல்போனை பயன்படுத்தாத உத்தி: சீர்காழி கொலை - கொள்ளை சம்பவம் நடந்தது எப்படி?

kaleelrahman

சீர்காழியில் நகை வியாபாரி வீட்டில், தாய், மகனை கொன்று, 12.5 கிலோ நகைகளை கொள்ளையடித்த சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. என்கவுண்டர் நடந்த இடத்தை மாவட்ட தலைமை நீதிபதி நேரில் ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை சீர்காழியில் நகை வியாபாரி தன்ராஜ் சவுத்ரியின் வீட்டில் நடந்த கொடூர கொலைகள் மற்றும் கொள்ளை குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மஹிபால்சிங், மணீஷ், ரமேஷ்பாட்டீல் மற்றும் கர்ணாராம் ஆகியோர் திட்டமிட்டே இந்தக் கொள்ளையில் இறங்கியுள்ளனர்.

போலீஸ் என்கவுண்டரில் இறந்த மஹிபால் மற்றும் ரமேஷ் பாட்டீல் இருவரும் கும்பகோணத்தில் ஆட்டோ மொபைல் உதிரிபாக கடையில் வேலை பார்த்துவந்துள்ளனர். மணீஷ் ஜெயங்கொண்டத்தில் பிளைவுட் கடையில் வேலை பார்த்துவந்துள்ளார். இக்கடையின் உரிமையாளரும் தன்ராஜ் சவுத்ரியும் நெருங்கிய நண்பர்கள். தன்ராஜ் சவுத்ரி, ராஜஸ்தானில் நடக்கும் விழாக்களுக்கு அதிகஅளவு நன்கொடைகளை அளிப்பதையும், அவரிடம் பணப்புழக்கம் அதிகம் இருந்ததையும் நோட்டமிட்ட மணிஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

கொள்ளையடிக்க வந்தபோது கர்ணாராம் காருடன் வீட்டுக்கு வெளியே தயாராக நிற்க, மஹிபால், மணீஷ், ரமேஷ் பாட்டீல் ஆகியோர் தன்ராஜ் வீட்டுக்குள் சென்று கொள்ளையடித்துள்ளனர். அப்போது 2 பேர் கொல்லப்பட்டதை அறிந்த கர்ணாராம் அச்சத்துடன் காரை எடுத்துக்கொண்டு தப்பிவிட்டார். செல்போனை பயன்படுத்தி மாட்டிக்கொள்ளக் கூடாது என்பதால் செல்போனை தவிர்த்த இந்த கும்பல், கர்ணாராமை தொடர்புகொள்ள வழியின்றி, தன்ராஜின் காரை எடுத்துக்கொண்டு தப்பியது.

ஆனால், தன்ராஜின் காரில் ஜிபிஎஸ் வசதி இருந்ததை அறிந்த மூவரும், இதனால் மாட்டிவிடக்கூடாது என்று அஞ்சி காரை விட்டுவிட்டு எருக்கூர் மேட்டுத்தெரு வயல்வெளியில் பதுங்கியுள்ளனர். சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் பற்றி கிராம மக்கள் அளித்த தகவலால் 3 கொள்ளையர்களும் பிடிபட்டனர். இந்த நிலையில்தான் என்கவுண்டரில் மஹிபால் கொல்லப்பட மற்ற இருவரும் கைது செய்யப்பட்டனர். காரில் தப்பிய கர்ணாராம் கும்பகோணத்தில் கைதுசெய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து வைத்தீஸ்வரன்கோவில் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த மணீஷ், ரமேஷ் பாட்டீல் இருவரும் கழிவறையில் வழுக்கி விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட பின், சீர்காழி பொறுப்பு நீதிபதி அமிர்தம் முன்னிலையில் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து 15 நாள் நீதிமன்றக் காவலில் இருவரும் நாகை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதேநேரத்தில், என்கவுண்டர் நடந்த இடத்தில் நாகை மாவட்ட தலைமை நீதிபதி ஜெகதீசன் நேரில் ஆய்வு செய்தார். சம்பவம் நடந்த இடத்தில் இருந்த பொறையார் காவல் ஆய்வாளர் செல்வத்திடம் நீதிபதி விசாரணை நடத்தினார். சம்பவ காட்சிகளை அப்போது காவல் ஆய்வாளர் செல்வம் நீதிபதியிடம் நடித்துக் காட்டினார். இதனைத் தொடர்ந்து, கொல்லப்பட்ட மஹிபாலின் உடல் வைக்கப்பட்டுள்ள சீர்காழி அரசு மருத்துவமனைக்குச் சென்ற நீதிபதி ஜெகதீசன், மஹிபால் உடலை ஆய்வு செய்தார்.