செல்வம் pt desk
குற்றம்

சேலம்: தூங்கிக் கொண்டிருந்த கணவரை கொடூரமாக கொலை செய்த மனைவி கைது

webteam

செய்தியாளர்: தங்கராஜூ

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் கிராமம் ஆசாரி தெருவைச் சேர்ந்தவர்கள் செல்வம் (65) - பூங்கொடி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், தம்பதியர் இருவரும் அருகில் உள்ள கரும்பாலையில் கூலி வேலை செய்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணவர் செல்வத்தின் கழுத்தை அறுத்து பூங்கொடி கொலை செய்துள்ளார். இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

போலீசார் விசாரணை

விசாரணையில், கரும்பு ஆலையில் வேலை முடிந்து வீட்டிற்குச் சென்ற செல்வம், சாப்பாடு இருக்கிறதா என்று மனைவி பூங்கொடியிடம் கேட்டுள்ளார். இதையடுத்து சமையல் செய்யவில்லை என்பதை தெரிந்து கொண்ட செல்வம், மனைவியை திட்டிவிட்டு, கடைக்குச் சென்று பரோட்டா வாங்கி வந்து கொடுத்துள்ளார். அதை சாப்பிட மறுத்த பூங்கொடி மிகவும் கோபமாகவும் ஆக்ரோஷமாகவும் இருந்துள்ளார். அப்போது கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து செல்வம், தூக்க மாத்திரையை சாப்பிட்டுவிட்டு வராண்டாவில் படுத்து தூங்கியுள்ளார். நள்ளிரவு நேரத்தில் எழுந்த பூங்கொடி, கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து பூங்கொடியை கைது செய்த ஓமலூர் போலீசார், அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, சேலம் பெண்கள் சிறையில் அடைத்தனர்.