குற்றம்

சேலம்: சிறுமியை கடத்தி கட்டாயத் திருமணம் - பைக் மெக்கானிக் போக்சோவில் கைது

webteam

கெங்கவல்லி அருகே மாணவியை கடத்தி கட்டாயத் திருமணம் செய்து கொண்ட பைக் மெக்கானிக்கை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள ஒதியத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் அஜீத்குமார். இவர், சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் பைக் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அஜீத்குமார் தலைவாசல் தனியார் கல்லூரியில் படித்து வரும் 17 வயது மாணவியை காதலித்து வந்துள்ளார்,

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டிலிருந்த மாணவியிடம் திருமண ஆசை வார்த்தை கூறிய அஜீத்குமார் கடத்திச் சென்றுள்ளார். இது குறித்து மாணவியின் தாயார் கெங்கவல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், மாணவியை தேடி வந்தனர்.

இதையடுத்து சேலம் நெடுஞ்சாலையில் கொத்தாம்பாடி பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த அஜீத்குமார் மற்றும் மாணவியை போலீசார் மீட்டனர். இதைத் தொடர்ந்து சிறுமியை கடத்தி கட்டாய திருமணம் செய்து கொண்ட அஜீத்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

பின்னர், மீட்கப்பட்ட மாணவி பெற்றோருடன் செல்ல மறுத்ததால் சேலம் அரசு பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.