குற்றம்

சென்னை பாடி மேம்பாலத்தின் கீழ் 100 அடி சாலையில் தொடர் கொள்ளை சம்பவம்; மக்கள் அச்சம்

நிவேதா ஜெகராஜா
சென்னை திருமங்கலத்தில் ஒரே இடத்தில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்கள் நடந்திருப்பது பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் சென்ற கல்லூரி மாணவனின் உடையை அவிழ்க்க வைத்து நடந்த கொள்ளை சம்பவம், லிப்ட் கேட்பது போல் நடித்து செய்யப்பட்ட கொள்ளை சம்பவம் ஆகிய அந்த இரு கொள்ளை சம்பவங்களும், அப்பகுதியில் பயணிப்போருக்கான அச்சத்தை அதிகப்படுத்தியுள்ளது. 
சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகரைச் சேர்ந்தவர் ருத்ரா (26). பச்சையப்பன் கல்லூரியில் பி.ஹெச்டி கணிதம் படித்து வருகிறார். பகுதி நேர வேலையாக இவர் கேட்டரிங் செய்து வருகிறார். இன்று அதிகாலையில் மேடவாக்கத்தில் கேட்டரிங் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது, பாடி மேம்பாலத்தின் கீழ் 100 அடி சாலையில் அவர் வண்டி பெட்ரோல் இல்லாமல் நின்றிருக்கிறது. இதனால் பைக்கை தள்ளி கொண்டு சென்றுள்ளார் அவர். அப்படி சென்று கொண்டிருந்த போது மறைந்து இருந்த அடையாளம் தெரியாத 3 பேர் வந்து ருத்ராவை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரின் உடைகளை எல்லாம் அவிழ்த்து அவரை கையால் தாக்கி அவரிடம் இருந்து செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடியுள்ளனர்.
இதைபோல பரத் என்பவர் முகப்பேரில் தனது நண்பரின் திருமணத்தில் கலந்து கொண்டு தனது  இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது பாடி மேம்பாலத்தின் கீழ் 100 அடி சாலையில் சென்ற போது ஒரு சிறுவன் லிப்ட் கேட்டுள்ளான். லிப்ட் கொடுப்பதற்காக வாகனத்தை நிறுத்திய போது, மறைந்திருந்த ஓடி வந்த அடையாளம் தெரியாத 2 பேர் கழுத்தில் கத்தியை வைத்து பாலத்திற்கு அடியில் அவரை அழைத்துச் சென்று அடித்துள்ளனர். பின் அவரிடமிருந்து  தங்க நகை, செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடியுள்ளனர். 
இந்த 2 வழிப்பறி கொள்ளை சம்பவங்கள் குறித்து திருமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 2 கொள்ளை சம்பவங்களிலும் 6 பேர் ஈடுபட்டுள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொள்ளை சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி இல்லை. 
இதனை நன்கு பார்த்த பிறகே கொள்ளையர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதனால் அருகில் உள்ள தெருக்களின் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் பழைய குற்றவாளிகளின் படத்தை புகார்தாரர்களிடம் காண்பித்து கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சியிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.