மாறி மாறி துப்பாக்கிச்சூடு நடத்தும் ரௌடிகள்  கோப்பு படம்
குற்றம்

உ.பி. | ஹாலிவுட் படத்தை மிஞ்சிய காட்சி.. நடு ரோட்டில் இரு குழுக்களுக்கிடையே நடந்த துப்பாக்கி சண்டை!

சண்முகப் பிரியா . செ

உத்திர பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள இசத்நகர் பகுதியின் லால்பூர் கிராமத்தில் வசிப்பவர் ஆதித்யா உபாத்யாய். இவர் அதேப் பகுதியில் உள்ள பிலிபித் பைபாஸ் சாலையின் பஜ்ரங் தாபா அருகே சங்கரா மகாதேவா மார்பிள்ஸ் என்ற பெயரில் மார்பிள் கடை நடத்தி வருகிறார். அந்த இடத்தைப் பெறுவதற்காக ராஜீவ் ராணா என்னும் பில்டர் முயற்சி செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ஆதித்யா தனது நிலத்தை கொடுக்க மறுக்கவே அடிக்கடி இருவறுக்கும் மோதல் ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், இன்று அதிகாலை ராஜீவ் ராணா ஆதித்யாவின் கடைக்குச் சென்று அவரது கடையை இரண்டு ஜேசிபி-களைக் கொண்டு இடிக்கத் தொடங்கியுள்ளார். இதானல் ஆத்திரமடைந்த ஆதித்யா அதனைத் தடுத்து அவருடன் சண்டையிடத் தொடங்கவே ராஜீவ் ராணா தன்னுடன் அழைத்து வந்திருந்த 30,40 அடியாட்களுடன் சேர்ந்து ஆதித்யாவுடன் சண்டையிடத் தொடங்கியுள்ளார்.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி இரு தரப்பினரும் தங்களிடம் இருந்த துப்பாக்கிகளை எடுத்து நடு ரோட்டில் மாறி மாறி சுட்டுள்ளனர். அத்தோடு நில்லாமல் ஜேசிபியையும் தீ வைத்துக் கொழுத்தியுள்ளனர்.

நிலமை கட்டுக்கடங்காமல் போகவே உள்ளூர்வாசிகள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இரண்டு நபர்களைக் கைது செய்தனர். தப்பியோடிய மற்ற நபர்களைத் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் நடந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ இப்போது சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவி வருகிறது.