குற்றம்

அண்ணன் கொலைக்கு காரணமானவரை பழிக்குப்பழியாக கொன்ற தம்பி ?; சென்னையில் அரங்கேறிய சம்பவம்

webteam

சென்னையில் ஒரு வருடத்திற்கு முன் நடந்த கொலை சம்பவத்திற்கு பழிவாங்கும் விதமாக ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை போரூரை அடுத்த பெரிய கொளுத்துவான்சேரி பகுதியில் உள்ள புதரில் வாலிபர் ஒருவர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் தலையில், கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடப்பதாக மாங்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், கால்கள், கைகள் கட்டப்பட்டு தலை நசுங்கி வாலிபர் கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டனர்.

பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் கொலை செய்யப்பட்டு கிடந்தது அதே பகுதியைச் சேர்ந்த ஜெயசூரியா (20) என்பதும், அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. கடந்த ஆண்டு அதே பகுதியில் உள்ள சுடுகாட்டில் வசந்த குமார் என்பவர் கொலை செய்யப்பட்டார்.

அந்த கொலைக்கு வழிவகுத்து கொடுத்தது ஜெயசூரியா என்பதால், வசந்தகுமாரின் தம்பி பழிவாங்கும் விதமாக தற்போது ஜெயசூரியாவை கொலை செய்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது. மேலும் கொலைக்கான முக்கிய காரணங்கள் என்ன ? கொலையாளிகள் வேறு யார் யார் ? என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.