குற்றவாளி தனசேகர்  pt desk
குற்றம்

சேலம்: பூப்பறித்துக் கொண்டிருந்த பிஞ்சுகளின் உயிரை பறித்த உறவினர் - போலீசார் விசாரணை

PT WEB

செய்தியாளர்: S.மோகன்ராஜ்

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டியை அடுத்த ஒடுவன்காடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜா - சித்ரா தம்பதியினர். இவர்களது மூத்த மகள் நவீனா, இளைய மகன் சுகன். நவீனாவும் சுகனும் அருகே உள்ள பள்ளியில் 12 மற்றும் 10 ஆம் வகுப்பு படித்து வந்தனர். இந்நிலையில், நேற்று பள்ளி முடிந்து வீடு திரும்பிய அவர்கள் இருவரும் தங்களின் தோட்டத்தில் பூக்களை பறித்துக் கொண்டிருந்துள்ளனர்.

அக்கா, தம்பி கொலை

அப்போது அண்டை வீட்டுக்காரரும், உறவினருமான தனசேகர் என்பவர் திடீரென தோட்டத்தில் புகுந்து அவர்கள் இருவரையும் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை தடுக்க வந்த அவர்களின் தந்தை ராஜாவை தாக்கிவிட்டு தனசேகர் தப்பியோடி தலைமறைவானதாக தெரிகிறது. இக்கொடூர சம்பவத்தில், சம்பவ இடத்திலேயே குழந்தைகள் இருவரும் உயிரிழந்தனர். காயமடைந்த அவர்களின் தந்தை ராஜா மீட்கட்பட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த கொடூர கொலை சம்பவம் குறித்து தகவலறிந்த சேலம் சரக டிஐஜி உமா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கவுதம் கோயல் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். தலைமறைவான தனசேகரை, மோப்ப நாய் உதவியுடன் தேடும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. தடய அறிவியல் நிபுணர்களும் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர்.

கதறி அழுத தாய்

தோட்டத்தில் பூப்பறித்த இரு குழந்தைகளின் உயிர் பறிக்கப்பட்ட சம்பவத்தால் அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கலங்கி நிற்கின்றனர்.