குற்றம்

மருத்துவமனை பரிசோதனையின்போது தப்பியோடிய கைதி.. துரத்தும் போலீஸ் - பொள்ளாச்சியில் பரபரப்பு

நிவேதா ஜெகராஜா

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்ற கைதி தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பொள்ளாச்சி அருகே உள்ள கருமாபுரத்தைச் சேர்ந்த மாணிக்கம் (வயது 44) என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர் பொள்ளாச்சி தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். இதன் அடிப்படையில் மாணிக்கத்தை கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள போலீசார் அவரை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது கைதி மாணிக்கம் திடீரென தப்பி ஓடியுள்ளார். இதனால் பதற்றமடைந்த போலீசாரும் அவரை துரத்தி கொண்டு ஓடி உள்ளனர். ஆனால் கைதி தப்பித்துவிட்டார் என சொல்லப்படுகிறது. இதைத்தொடர்ந்து போலீசார் மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து தப்பியோடிய மாணிக்கத்தை தீவிரமாக தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள அரசு மருத்துவமனையில் கைதி தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.