குற்றம்

மோசடியில் ஈடுபட்ட போலீஸ், வழக்கறிஞர் உட்பட 6 பேர் கைது: ரூ. 15 லட்சம் பறிமுதல்

webteam

ஓமலூரில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் வழக்கறிஞரொருவர் உட்பட மோசடி கும்பலை சேர்ந்த 6 பேரை ஓமலூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகேயுள்ள பெரும்பாலை விநாயகபுரத்தை சேர்ந்தவர் பழனி. இவர் தீபாவளி பண்டிகைக்கு தங்ககாசு ஏலச்சீட்டு நடத்தி வருகிறார். இதில் தங்க காசுகள் வாங்குவதற்காக, சேலத்தில் உள்ள புரோக்கர்களிடம் பேசியுள்ளார். அப்போது சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த பெரியசாமி என்ற நபர், கிராமுக்கு 300 ரூபாய் குறைத்து தங்கக்காசு தருவதாக கூறியுள்ளார். இதையடுத்து பழனி 15 லட்சம் ரூபாய் பணத்துடன் ஓமலூர் வந்துள்ளார். அப்போது ஓமலூர் ஆர்.சி.செட்டிப்பட்டி பகுதியில், பெரியசாமியின் மகன் ஜெகன், மருமகன் பரணிதரனுடன் வந்து, பழனியிடம் போலி தங்கக்காசுகளை காட்டி பணத்தை பெற்றுள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், தாங்கள் போலீசார் என்று கூறி பழனி வைத்திருந்த 10 லட்சம் பணத்தை பறித்து கொண்டு காவல் நிலையம் வாருமாறு கூறியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த பழனி, உதவி ஆய்வாளர் எனக்கூறிய நபரை மடக்கி பிடித்து ஓமலூர் போலீசாரிடம் ஒப்படைத்தார்.

பழனி புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அப்போது சேலம் ஆதி சக்திபுரத்தை சேர்ந்த உதயசங்கர், எடப்பாடி சமுத்திரம் பகுதியை சேர்ந்த, சேலம் கொண்டலாம்பட்டி காவல்நிலையத்தில் போலீஸ் எஸ்.எஸ்.ஐ-யாக பணியாற்றி வரும் சரவணன் உட்பட சிலர் போலி தங்கக்காசுகளை கொடுத்து மோசடி செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட போலீஸ் சிறப்பு உதவி ஆய்வாளர் சரவணன், அஸ்தம்பட்டியை சேர்ந்த வழக்கறிஞர் விஜயகுமார், மோசடி கும்பல் பெரியசாமி, அவரது மகன் ஜெகன், சங்ககிரியை சேர்ந்த பரணிதரன், உதயசங்கர் ஆகிய 6 பேரையும் கைது செய்தனர்.

இவர்கள் 6 பேர் மீதும் மோசடி, பணம் பறிப்பு உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து 6 பேரையும் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இவர்கள் 6 பேரும் கூட்டு சேர்ந்து மண்ணுளி பாம்பு வியாபாரமும் செய்தது தெரிய வந்ததுள்ளது. மேலும், இவர்கள் வேறு என்னென்ன மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.