குற்றம்

வாடகைக்கு காரை வாங்கி அடகு வைத்து பணம் ! இருவர் கைது

வாடகைக்கு காரை வாங்கி அடகு வைத்து பணம் ! இருவர் கைது

webteam

சென்னையை அடுத்த அம்பத்தூரில் வாடகைக்கு கார்களைப் பெற்று அவற்றை அடகு வைத்து மோசடி செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

சென்னை அருகே மேடவாக்கம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் சேகர். இவர் அர்ச்சகராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் அம்பத்தூர் பானு நகர் 22வது அவென்யூவை சேர்ந்த சுதர்சன் என்ற கார் புரோக்கருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சேகர் தனக்கு சொந்தமான காரை மாத வாடகைக்காக சுதர்சனிடம் கடந்த செப்டம்பர் மாதம் ஒப்படைத்து உள்ளார். இதனை வாங்கிய சுதர்சனம் மாதந்தோறும் ரூ.25 ஆயிரம் மாத வாடகை தருவதாக கூறியுள்ளார்.


இதனையெடுத்து ஒரு மாத வாடகை மட்டுமே சேகரிடம் கொடுத்து உள்ளார். பின்னர், சேகர் பலமுறை சுதர்சனை தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சுதர்சன் மீது சந்தேகம் அடைந்த சேகர் கடந்த 2 ஆம் தேதி அன்று அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இதனையடுத்து அம்பத்தூர் காவல் உதவி ஆணையர் கர்ணன், ஆய்வாளர் பொர்க்கொடி தலைமையில் வழக்கு பதிவு செய்து காவல்துறை தனிப்படை அமைத்து சுதர்சனத்தை தேடி வந்தனர். இந்நிலையில் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு சுதர்சனை அம்பத்தூர் பஸ் நிறுத்தத்தில் கைது செய்தனர். பின்னர், போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். காவல்துறை விசாரணையில் சுதர்சனமும் அவரது நண்பர் அம்பத்தூர் சண்முகபுரம் கோரை தெருவை சார்ந்த எட்வின்ராஜுடன் சேர்ந்து சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் கார்களை மாத வாடகைக்கு வாங்கி சண்முகபுரத்தை சேர்ந்த சுரேஷ் என்பவரிடம் கொடுத்துள்ளனர். அதனை அவர் திருவள்ளூர், ஆரணி, வேலூர் பகுதியில் அடகு வைத்து பல லட்சம் பணத்தை பெற்றுள்ளார் என்பது தெரியவந்தது. 

இதனையடுத்து, போலீசார் 12 கார்களை பறிமுதல் செய்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த எட்வின்ராஜையும் போலீசார் நேற்று காலை கைது செய்தனர். பின்னர் போலீசார் சுதர்சன், எட்வின்ராஜ் ஆகிய இருவரையும் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிபதி உத்தரவின் பேரில் இருவரையும்  புழல் சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக தலைமறைவாக உள்ள சுரேஷ் என்பரை போலீசார் தேடி வருகின்றனர்.