Accused with police pt desk
குற்றம்

பழனி: ஆபாச படம் எடுத்து நூதன வழிப்பறி - 2 பெண்கள் உட்பட 5 பேர் கைது

webteam

செய்தியாளர்: அஜ்மீர் ராஜா

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு பழனி நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், “இரண்டு பெண்கள் என்னை தனிமையில் இருக்க அழைத்தனர். அவர்களுடன் நான் இருந்தபோது, அந்த இடத்தில் மறைந்திருந்த அவர்களின் ஆண் நண்பர்கள் அவற்றை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துவிட்டனர். பின்னர் என்னிடம் இருந்த செல்போன் பணம் உள்ளிட்டவற்றை கத்தியைக் காட்டி மிரட்டி பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டனர்” எனத் தெரிவித்திருந்தார்.

Arrested

புகாரின் அடிப்படையில் டிஎஸ்பி தனஞ்ஜெயன், ஆய்வாளர் மணிமாறன் ஆகியோரின் உத்தரவின் பேரில் போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், நேற்று காலை சண்முக நதி அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக இரண்டு கார்களில் வந்த ஐந்து பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், திண்டுக்கல்லை சேர்ந்த குணசேகரன் (40), லோகநாதன், நத்தத்தைச் சேர்ந்த பாலமுருகன் (37), சின்னாளபட்டியை சேர்ந்த பவித்ரா (24), சீலப்பாடியை சேர்ந்த காமாட்சி (25) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இவர்கள், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் விடுதியில் ரமேஷ் என்பவரிடம் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து இரண்டு கார், அரிவாள், மூன்று செல்போன்கள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்த போலீசார், ஐந்து பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் பழனியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.