குற்றம்

ராமநாதபுரம்: விசாரணைக்கு வந்த டெல்லி போலீஸ்; ஆள் மாற்றி விசாரித்ததால் கைகலப்பு

ராமநாதபுரம்: விசாரணைக்கு வந்த டெல்லி போலீஸ்; ஆள் மாற்றி விசாரித்ததால் கைகலப்பு

JustinDurai
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் போலி விசா தொடர்பாக விசாரணை நடத்த சாதாரண உடையில் வந்த டெல்லி காவல்துறையினருக்கும் அப்பகுதி இளைஞர்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டு ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
போலி விசா தயாரித்து ஒருவரை ஓமன் நாட்டிற்கு அனுப்பியது தொடர்பாக கீழக்கரையை சேர்ந்த பக்ருதீன் என்பவரிடம் விசாரணை நடத்த டெல்லி காவல்துறையினர் வந்துள்ளனர். ஆனால் கீழக்கரையில் நபீல் என்பவரை பக்ரூதீன் என தவறாக நினைத்து அவரிடம் விசாரணை நடத்தியிருக்கின்றனர் டெல்லி காவல்துறையினர். சீருடையில் இல்லாமால் சாதாரண உடுப்பில் வந்து விசாரணை நடத்திய காவல்துறையினர் மீது நபீலுக்கு சந்தேகம் வரவே அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
நபீலின் செல்போனை காவல்துறையினர் பறித்ததையடுத்து கைக்கலப்பு ஏற்பட்டிருக்கிறது. நபீல் தாக்கப்படுவதை பார்த்து உள்ளூர் இளைஞர்கள் சிலரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதன் பின்னரே உள்ளூர் காவல்துறையினர் வந்து இருதரப்பினரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீசார், உள்ளூர் காவல்நிலையத்தில் தகவல் அளித்த பின்னர் விசாரணை மேற்கொள்ள டெல்லி காவல்துறையினருக்கு அறிவுறுத்தினர்.