குற்றம்

நாமக்கல்: நகை பணத்துக்காக குழவிக்கல்லை தலையில் போட்டு மூதாட்டி கொலை

Sinekadhara

நாமக்கல் அருகே நகை பணத்துக்காக குழவிக்கல்லை போட்டு மூதாட்டி கொலை செய்யப்பட்டார். மூதாட்டியின் வீட்டில் குடியிருந்த பெயிண்டரே கொலை செய்தது மோகனூர் போலீசாரின் விசாரணையில் அம்பலமானது.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் நேரு நகர் பகுதியில் கணவனை இழந்த நிலையில் தனது சொந்த வீட்டில் தனியாக மாராயி (92) என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இன்று காலை வெகுநேரமாகியும் மூதாட்டி வீட்டின் கதவு திறக்காத நிலையில் அவரது மற்றொரு வீட்டில் குடியிருந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த காளிதாஸ் அவரது பேரன் கணேசனுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த மாராயின் உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மூதாட்டியின் தலையில் காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார். இதனையடுத்து மோகனூர் காவல் நிலையத்தில் தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் அவரது வீட்டில் வசித்த காளிதாஸை விசாரித்தபோது பாட்டி வைத்திருந்த நகை மற்றும் பணத்தைத் திருட சென்றபோது பாட்டி எழுந்து கொண்டதால் அருகில் இருந்த சிறிய குழவிக்கல்லால் அவரது தலையில் அடித்து கொலை செய்துவிட்டு தனது வீட்டிற்கு வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து காளிதாஸை கைதுசெய்த மோகனூர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். நகை பணத்துக்காக தான் குடியிருந்த வீட்டின் உரிமையாளரையே கொலைசெய்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  காளிதாஸின் மனைவி, உயிரிழந்த மாராயி அவர்களின் பேரன் கணேசன் வைத்துள்ள கடையில் பணிபுரிந்து வருவது குறப்பிடத்தக்கது.