குற்றம்

நெல்லை: 7 மாத பெண் குழந்தையை கடத்தி விற்க முயற்சி.. 2 பெண்கள், செய்தியாளர் ஒருவர் கைது

kaleelrahman

அம்பை அருகே 7 மாத பெண் குழந்தையை கடத்தி விற்க முயன்ற 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள கீழ பாப்பாகுடி காட்டுநாயக்கன் தெருவைச் சேர்ந்தவர்கள் கார்த்திக் - இசக்கியம்மாள் தம்பதியினர், இவர்களுக்கு பிரியங்கா என்ற 7 மாத பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த 19 ஆம் தேதி இரவு இசக்கியம்மாள் அவரது குழந்தையுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். இதையடுத்து 20 ஆம் தேதி அதிகாலை இசக்கியம்மாள் எழுந்து பார்த்தபோது குழந்தை காணாமல் போனது தெரியவந்தது.

இதனையடுத்து குழந்தையின் பெற்றோர் பாப்பாகுடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதுதொடர்பாக பாப்பாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து அம்பை டி.எஸ்.பி. பிரான்சிஸ் தலைமையிலான தனிப்படையினர் விசாரித்து வந்தனர். இந்த நிலையில் செல்போன் சிக்னல், சி.சி.டி.வி. கேமராக்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப வசதியுடன் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த கனி (57), முத்துச்செல்வி (30), ஆலங்குளத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (34) ஆகிய 3 பேரும் குழந்தையை கடத்தி, ஆலங்குளத்தில் விற்க முயன்ற போது போலீசார் அவர்களை கைது செய்தனர். கார்த்திகேயன் என்பவர் பிரபல தனியார் தொலைக்காட்சி செய்தியாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.