குற்றம்

சென்னை விமான நிலையத்தில் ரூ1.13 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் மின்னணு பொருட்கள் பறிமுதல்

EllusamyKarthik

துபாயிலிருந்து  வியாழக்கிழமை அன்று (16.12.2021)  இண்டிகோ விமானம் மூலம் சென்னை வந்த நான்கு பயணிகளை, விமான நிலைய வெளியேறும் நுழைவாயிலில், சுங்கத்துறை அதிகாரிகள் வழிமறித்து சோதனை செய்தனர்.  அவர்களது உடல் மற்றும் உடமைகளை சோதனையிட்டதில், தங்கத் துகள் வடிவில்,  அட்டைப்பெட்டிகளில் 1147 கிராம் எடையுள்ள, ரூ.49.50 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தி வரப்பட்டது கண்டறியப்பட்டு, கைப்பற்றப்பட்டது.  மேலும் இந்தப் பயணிகள் நான்கு பேரும், ரூ.42.04 லட்சம் மதிப்புள்ள மின்னணு பொருட்களையும் கடத்தி வந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.  இதையடுத்து, 4 பயணிகளும் கைது செய்யப்பட்டனர். 

மற்றொரு சம்பவத்தில்,  சார்ஜாவிலிருந்து அதேநாளில் வந்த ஒரு பயணியிடம் நடத்திய சோதனையின் போது, ரூ.11.87 லட்சம் மதிப்புள்ள 275 கிராம் தங்கம் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. மேலும் அந்தப் பயணி, ரூ.9.80 லட்சம் மதிப்புள்ள மின்னணு பொருட்களை கடத்தி வந்ததும் கண்டறியப்பட்டு, தங்கம் மற்றும் மின்னணு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அந்தப் பயணியும் கைது செய்யப்பட்டார். 

மொத்தத்தில் ரூ.61.37 லட்சம் மதிப்புள்ள 1.42கிலோ தங்கம் மற்றும் ரூ.51.84 லட்சம் மதிப்புள்ள மின்னணு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஐந்து பயணிகள் கைது செய்யப்பட்டதாக, விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SOURCE : PIB