குற்றம்

நாங்குநேரியில் பள்ளி மாணவிக்கு பிரசவத்தில் பெண் குழந்தை - அதிர்ச்சியடைந்த பெற்றோர்

ஜா. ஜாக்சன் சிங்

நாங்குநேரியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இதற்கு காரணமான இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், பாளையங்கோட்டையில் உள்ள அரசு உதவிப் பெறும் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இதனிடையே, 2 ஆண்டுகளுக்கு முன்பு அந்த கிராமத்தில் நடந்த கோயில் கொடை திருவிழாவிற்கு சவுண்ட் சர்வீஸ் வேலை செய்வதற்காக பணகுடியை சேர்ந்த இசக்கியப்பன் (20) என்பவர் வந்துள்ளார். அந்த கிராமத்தில் மூன்று நாட்கள் தங்கியிருந்து, சவுண்ட் சர்வீஸ் பணியை கவனித்து வந்துள்ளார்.

அப்போது அந்த மாணவிக்கும், இசக்கியப்பனுக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பின் காரணமாக, அந்த மாணவி இசக்கியப்பனுக்கு பணம் மற்றும் தங்க நகைகளை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. நாளடைவில், மாணவிக்கும், இசக்கியப்பனுக்கும் இடையே நெருக்கம் அதிகமானதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அந்த மாணவிக்கு வயிறுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மாணவியின் பெற்றோர் அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அவரை சோதித்துப் பார்த்த மருத்துவர்கள், மாணவியின் வயிற்றில் நீர்க்குமிழிகள் இருப்பதாகவும் வேறு ஒன்றும் பிரச்சினை இல்லை எனவும் கூறி அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த சூழலில், நேற்றும் மாணவிக்கு மீண்டும் வயிறு வலி ஏற்படவே, நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அவரது பெற்றோர்கள் சேர்த்துள்ளனர். அங்கு சோதித்துப் பார்த்த மருத்துவர்கள், மாணவி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, சிறிது நேரத்திலேயே மாணவிக்கு சுகப்பிரசவம் ஏற்பட்டு பெண் குழந்தை பிறந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், நாங்குநேரி மகளிர் காவல் நிலையத்தில் தகவல் கொடுத்தனர். இதன்பேரில், மாணவியிடம் விசாரணை நடத்திய போலீஸார், மாணவியை கர்ப்பம் அடைய செய்த இசக்கியப்பனை பணகுடியில் கைது செய்து நாங்குநேரி அழைத்துச் சென்றனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.