குற்றம்

நாகர்கோவில்: தனியார் நிதி நிறுவனத்தில் 82 சவரன் நகை கையாடல்... சிக்கும் மேலாளர்!

webteam

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செயல்பட்டு வரும் மணப்புரம் பைனான்ஸ் நிறுவனத்தில் சுமார் 82 சவரன் தங்க நகை கையாடல் செய்து மோசடியில் ஈடுபட்டதாக மேலாளர் ஜினிசா உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் செட்டிகுளம் அருகே மணப்புரம் பைனான்ஸ் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிதி நிறுவனத்தில் பலரும் தங்கள் தங்க நகைகளை அடகு வைத்து பணம் பெற்று உள்ளனர்.

இதற்கிடையே இந்த நிறுவனத்தின் தணிக்கை குழு ஊழியர்கள், இந்த நிதி நிறுவனத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சுமார் 82 சவரன் தங்க நகைகள் மாயமாகியிருப்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் உடனடியாக இந்த விவகாரம் தொடர்பாக கோட்டார் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் விசரானை செய்த போலீசார், இந்த நிறுவனத்தின் மேலாளராக பணியாற்றி வந்த ஜினிசா மற்றும் அவரது கணவர் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவான 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.