Accused pt desk
குற்றம்

நாகப்பட்டினம்: மனைவி மீது ஏற்பட்ட சந்தேகம்- கணவனின் கொடூர செயல்

webteam

செய்தியாளர்: என்.விஷ்ணுவர்த்தன்

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகலை அடுத்த அம்பல் ஊராட்சி இளங்குடியான் தெருவைச் சேர்ந்தவர்கள் மனோகரன் (59) அமுதா (55) தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமான நிலையில், சென்னையில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், மனோகரன் தனது மனைவி அமுதா மீது சந்தேகப்பட்டதால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

Couple

இந்நிலையில், வழக்கம்போல் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த மனோகரன், அமுதாவை மின்சார ஒயரால் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் கேஸ் சிலிண்டரின் குழாயை அமுதாவின் உடலில் கட்டி கொளுத்திவிட்டு வீட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் திருக்கண்ணபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின் பேரில் நாகூர் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார், திருக்கண்ணபுரம் சப்-இன்ஸ்பெக்டர் விவேக் ரவிராஜ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திற்குச் சென்று உயிரிழந்த அமுதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மகன் சாம்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் தலைமறைவாக இருந்த மனோகரனை கைது செய்தனர்.

Arrested

இதைத்தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் அஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.