குற்றம்

3 வயது சிறுவனை கடத்தும் மர்ம நபர்: சிசிடிவி காட்சிகள் வெளியீடு

webteam

சென்னை துரைப்பாக்கத்தில் 3 வயது சிறுவன் கடத்தப்பட்ட சம்பவத்தின் கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகியுள்ளன. 

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக குழந்தைக் கடத்தல் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளைப் பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறும், காவல்துறை தரப்பில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை துரைப்பாக்கத்தில் 3 வயது சிறுவன் மர்ம நபரால் கடத்தப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. அடையாளம் தெரியாத ஒருவர் குழந்தையின் ‌கையை பிடித்துக் கொண்டு நடந்து செல்வது காட்சிகளில் பதிவாகியுள்ளது. 

துரைப்பாக்கத்தைச் சேர்ந்த குரு-பிரேமலதா தம்பதியின் இரண்டாவது மகன் விஷ்வா நேற்றிரவு வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது காணாமல் போயியுள்ளான். பெற்றோர் பல இடங்களில் தேடியும் விஷ்வாவைக் காணாத நிலையில், துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றனர். சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்த காவல்துறையினர், கண்காணிப்பு கேமராக் காட்சிகளை ஆராய்ந்ததில் குழந்தை கடத்தப்பட்டது தெரியவந்திருக்கிறது. அதையடுத்து 4 தனிப்ப‌டைகள் அமைத்து காவல்துறையினர் சிறுவனை தேடி வருகின்றனர்.