குற்றம்

மனைவியின் காதலனை 30 முறை குத்திக்கொன்ற கணவன்!

webteam

வடகிழக்கு டெல்லியில் உள்ள பஜனபுராவைச் சேர்ந்தவர் வினோத். வயது 30. இவரது மனைவிக்கும் அருகில் வசிக்கும் ஷானு (21) என்பவருக்கும் கள்ளத் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டார் வினோத். இதையடுத்து ஷானுவை கொல்ல முடிவெடுத்தார். நேற்று முன் தினம், தன் மனைவியை, ‘நீ உங்க ஊருக்குப் போயிட்டு வா’ என்று அனுப்பினார் வினோத். காரணமே இல்லாமல் தன்னை ஊருக்கு அனுப்புகிறாரே என்று யோசனையிலேயே சென்றார் அவர். பிறகு வீட்டின் அருகில் உள்ள 15 வயது பையனை துணைக்கு அழைத்த வினோத், தனது மனைவியின் காதலனை கொல்லப்போவதாகவும் அதற்கு உதவ வேண்டும் என்றும் சொன்னார்.
பின்னர் ஷானுவுக்கு தன் மனைவியின் போன் நம்பரில் இருந்து மிஸ்டு கால் கொடுத்தார். ஆனால் பேசவில்லை. வினோத்தின் மனைவிதான் பேசுகிறார் என நினைத்து அவர் வீட்டுக்கு வந்தார் ஷானு. அங்கு வினோத்துக்கும் ஷானுவுக்கும் வாக்கு வாதம். மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நீட்டினான் பக்கத்து வீட்டு பையன். பின்னர் அந்தக் கத்தியால் ஷானை 30 முறை மாறி மாறி குத்தினார் வினோத். இதையடுத்து ரத்த வெள்ளத்தில் சரிந்தார் ஷானு.
இந்த நேரத்தில் வெளியே சென்றிருந்த வினோத்தின் 80 வயது அம்மா வீட்டுக்குள் வர, கதவை வெளியே பூட்டிவிட்டு தப்பிவிட்டான் வினோத். உள்ளே உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஷானுவை கண்டதும் திடுக்கிட்ட வினோத்தின் அம்மா, அக்கம் பக்கத்து வீட்டினரை அழைத்து விஷயத்தைச் சொன்னார். பின்னர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கதவை உடைத்து உடலை மீட்டனர். தலைமறைவான வினோத்தை தேடி கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.