குற்றம்

அண்ணனை அரிவாளால் வெட்டியவரை கொலை செய்த தம்பி - போதையில் நிகழ்ந்த விபரீதம்

webteam

நாகர்கோவில் அருகே அண்ணனை அரிவாளால் வெட்டிய வாலிபரை இரும்பு கம்பியால் குத்தி கொலை செய்த தம்பி கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் காந்திநகர் காலணியை சேர்ந்தவர் வினோத் (23). வாடகை கார் ஓட்டி வந்தார். இவருக்கும் அவரது நண்பரான அனந்தன்நகர் பகுதியை சேர்ந்த ஜெனிஸ்டர் (25) என்பவருக்கும் இடையே நேற்று முன்தினம் இரவு போதையில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வினோத் அரிவாளால் ஜெனிஸ்டரை வெட்டியதாக தெரிகிறது. இதில் வயிற்று பகுதியில் ஜெனிஸ்டருக்கு வெட்டுக்காயம் ஏற்பட்டு மயக்க நிலையை அடைந்துள்ளார்.

இதையடுத்து போதை தெளிந்த வினோத், ரத்த வெள்ளத்தில் இருந்த ஜெனிஸ்டரை காப்பாற்ற ஆட்களை அழைத்துள்ளார். அப்போது அங்கு ஓடிவந்த ஜெனிஸ்டரின் தம்பி வின்ஸ்டன் (19) அருகில் கிடந்த கூர்மையான கம்பியால் வினோத்தை குத்தியுள்ளார். குத்துப்பட்ட வினோத் தனது வீட்டை நோக்கி ஓடிய நிலையில் வீடை அடைவதற்கு முன் சாலையில் விழுந்து உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த போலீசார் ஜெனிஸ்டரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வினோத்தை கொலை செய்த வின்ஸ்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.