குற்றம்

குஜராத்: பொது சுடுகாட்டில் பட்டியலினத்தவரின் சடலத்தை தகனம் செய்ய எதிர்ப்பு!

Sinekadhara

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள சிஸ்வா கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், பட்டியலினத்தைச் சேர்ந்த இறந்தவரின் சடலத்தை தகனம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை, பட்டியலினத்தைச் சேர்ந்த பிகாபாய் என்ற நபரின் உடலை ரோஹித்வாஸில் உள்ள ஒரு இடுகாட்டில் தகனம் செய்ய அவரது உறவினர்கள் கொண்டுசென்றிருக்கின்றனர். பூட்டப்பட்ட இடுகாட்டின் சாவியைத் தர கிராம வளர்ச்சி சபையின் தலைவரான நரேந்திர படேல் மறுத்திருக்கிறார். மேலும் பட்டியலினத்தவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட திறந்தவெளி மைதானத்தில் வைத்து இறுதிச்சடங்கை செய்துகொள்ளுமாறு கூறியிருக்கிறார். இதனால் இறந்தவரின் குடும்பத்திற்கும் படேலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. எனவே பிகாபாயின் குடும்பம் காவல்துறையின் உதவியை நாடியிருக்கின்றனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், இடுகாட்டின் கதவை திறக்குமாறு படேலிடம் கூறியிருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கென்று நியமிக்கப்பட்டிருக்கும் மைதானத்திற்கு கொண்டுசெல்லுமாறு போலீஸாரிடமும் கூறியிருக்கிறார். ஆனால் மழைக் காரணமாக மைதானத்தில் அதிக அளவு தண்ணீர் தேங்கியிருப்பதாகவும், அங்கு போதிய வசதிகள் இல்லை எனவும் கூறியிருக்கின்றனர். மேலும் இறந்த 70 வயது நபருக்கு அனைத்து சடங்குகளையும் செய்யவேண்டும் எனவும் அவர்கள் கூறியிருக்கின்றனர்.

கடந்த 6 மாதங்களாக இந்த பொதுவான இடுகாட்டில் வைத்துதான் அனைத்து வகுப்பினரும் தகனம் செய்வதாகவும், இந்த ஒரு குடும்பத்தை மட்டும் அனுமதிக்க மறுத்ததாகவும் இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு கொடுத்த தகவலில் போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும் 3 வாரங்களுக்கு முன்புகூட பட்டியலினத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை தகனம் செய்தபோது எந்த மறுப்பும் எழவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். காவல்துறை தலையிட்டதால் தகனம் செய்ய ஒத்துக்கொண்ட படேலை, இந்திய சட்டப்பிரிவு 341இன் கீழ் போலீஸார் கைதுசெய்துள்ளனர்.