Accused pt desk
குற்றம்

முன்னாள் திமுக நிர்வாகி வீட்டின் முன்பு வாளுடன் சுற்றித் திரிந்த நபர் கைது – பரபரப்பு வாக்குமூலம்

முன்னாள் திமுக மண்டல தலைவர் வீட்டின் முன்பாக வாளுடன் சுற்றித் திரிந்த மணிகண்டன் (எ) மாட்டு மணி கைது. குற்றவாளி அளித்த பரபரப்பு வாக்கு மூலம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

webteam

செய்தியாளர்: மணிகண்டபிரபு

மதுரை அனுப்பானடி காமராஜர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் வி.கே.குருசாமி. திமுக முன்னாள் மண்டல தலைவரான இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் மண்டல தலைவர் ராஜபாண்டி குடும்பத்தாருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. இதில், இருதரப்பிலும் நடந்துவரும் பழிக்குப்பழி மோதலில் ராஜபாண்டியின் மகன், வி.கே.குருசாமியின் மருமகன் உள்பட இருதரப்பிலும் 20க்கும் மேற்பட்ட கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதனால் இரு தரப்பினரும் காவல் துறையினரின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.

Court

இதனிடையே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெங்களூரில் வைத்து வி.கே.குருசாமி சரமாரியாக ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளார். அதில் படுகாயமடைந்த அவர், பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், தற்போது மதுரையில் உள்ள தனது வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கீரைத்துறை காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுவந்தனர். அப்போது மதுரை வாழைத்தோப்பு பட்டறை சந்து எதிரேயுள்ள மைதானத்தில் சந்தேகத்துக்கு உரிய வகையில் நின்ற மதுரை காமராஜபுரம் குமரன் குறுக்குதெரு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற மாட்டு மணியை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மணிகண்டன் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர் அவரை சோதனை செய்தபோது பெரிய வாள் ஒன்றை உடலில் மறைத்து வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கையாக மணிகண்டனை கைது செய்த கீரைத்துறை காவல் துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

Prison

அப்போது மணிகண்டன் பல குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்டவர் என்பதும், சரித்திர பதிவேடு குற்றவாளியாக குருசாமியின் தரப்பை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஆயுதம் வைத்திருந்தது குறித்து விசாரணை நடத்தியபோது “குருசாமி தரப்பினரான எங்களுக்கும், ராஜபாண்டி தரப்பினருக்கும் முன்பகை காரணமாக அடுத்தடுத்து கொலைகள் நடைபெறுகிறது. தற்போது குருசாமி, வீட்டில் இருந்து சிகிச்சை எடுத்துவரும் நிலையில் எங்களுடைய எதிர்தரப்பைச் சேர்ந்தவர்கள் அவரை தாக்குவதற்காக வந்தால் அவர்களை தாக்கி கொலை செய்ய வேண்டும் என்று நீண்ட வாளுடன் இருக்கிறேன்” என ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த காவல் துறையினர் மணிகண்டன் என்ற மாட்டு மணியிடம் இருந்த வாளை பறிமுதல் செய்து அவர் மீது கொலை செய்யும் நோக்கோடு ஆயுதம் வைத்திருந்ததாக வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் சிறையில் அடைத்தனர்.

மதுரை மத்திய சிறைச்சாலை

வீ.கே.குருசாமி ராஜபாண்டி தரப்பினர் இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில், வீ.கே.குருசாமி வீட்டின் அருகே வாளுடன் சுற்றித் திரிந்த மணிகண்டன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.