குற்றம்

மதுரை: கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 6 பேர் கைது

PT

மதிச்சியம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மதுரை மதிச்சியம் வைகை வடகரை பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் சிலர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் காவல்துறையினர் ரோந்து சென்றனர்.

அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் கையில் பிளாஸ்டிக் மற்றும் மஞ்சள் பைகளுடன் சிலர் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து பைகளில் பதுக்கி வைத்திருந்த 8 கிலோ கஞ்சா மற்றும் 2 வாள், 11 ஆயிரம் பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

இதைத்தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் குலமங்கலம் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த சதீஷ், சிவகங்கையைச் சேர்ந்த அண்ணாமலை, மற்றும் ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்த அர்ஜூன், தினேஷ், புதூர் பகுதியைச் சேர்ந்த மகேஷ்வரன் விக்னேஷ் என்பது தெரியவந்தது.

இதையடுத்து ஆறு பேர் மீது மதிச்சியம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.