குற்றம்

கிருஷ்ணகிரி: வீடு புகுந்து சமையல் மாஸ்டர் வெட்டிக் கொலை...போலீஸ் விசாரணை

kaleelrahman

கிருஷ்ணகிரியில் மதுரையை சேர்ந்த சமையல் மாஸ்டர் கத்தியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஒருவர் பலத்த காயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஜெயமணி மற்றும் இவரது நண்பர் தேவபாண்டியன் ஆகிய இருவரும் கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட ஜக்கப்பன் நகர் முதல் தெருவில் வாடகை வீடு எடுத்து தங்கி சமையல் வேலையில் ஈடுப்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை ஜெயமணி வீட்டில் இருந்து அலறல் சத்தம் வந்ததை அடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வீட்டுற்குள் சென்று பார்த்தபோது ஜெயமணி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார்.

மேலும் தேவபாண்டியன் தலை மற்றும் உடலில் பல்வேறு இடங்களில் வெட்டுக் காயத்துடன் இருந்ததைக் கண்ட காவல் துறையினர் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ஜெயமணியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.


இதைத்தொடர்ந்து இந்தக் கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சமையல் மாஸ்டரை கத்தியால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்ற கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் வீட்டிற்குள் புகுந்து சாமையல் மாஸ்டர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.