Kerala youth arrested pt desk
குற்றம்

“காதலியை என்னோடு சேர்த்து வைங்க...” - வாகனத்தை திருடிவிட்டு போலீசாரிடம் கதறி அழுத கேரள இளைஞர்!

ஜெ.அன்பரசன்

கொரட்டூர் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவர், டெம்போ ட்ராவலர் ஒன்றின் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 22 ஆம் தேதி அண்ணா நகர் 6-வது அவென்யூவில் ஒரு பேக்கரியில் சரக்கு இறக்கி வைத்து விட்டு வந்து பார்த்தபோது தனது டெம்போ ட்ராவலர் காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த கல்யாணசுந்தரம், அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

Tempo

அப்போது டெம்போ ட்ராவலர் வாகனம் சென்னை விமான நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து டெம்போ ட்ராவலரை மீட்ட அண்ணா நகர் போலீசார், தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் அண்ணாநகர் பகுதியில் சுற்றித்திரிந்த இளைஞர் ஒருவரை அழைத்து வந்து விசாரணை செய்ததில் அந்த இளைஞர்தான் டெம்போ ட்ராவலரை திருடிச் சென்றது தெரியவந்தது. விசாரணையில், அவர் கேரளாவைச் சேர்ந்த அப்துல் ஜலில் (28) என்பதும் பட்டதாரியான இவர், கேரளாவில் ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

முகநூல் வழியாக சில மாதங்களுக்கு முன்பு சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் அப்துல் ஜலீலுக்கு பழக்கமாகியுள்ளார். பின்னர் இருவரும் காதலித்து வந்ததாக அப்துல் ஜலீல் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சில தினங்களுக்கு முன் கேரளாவில் இருந்து புறப்பட்டு தனது காதலியை பார்ப்பதற்காக சென்னை அண்ணா நகருக்கு வந்துள்ளார். இங்கு அப்பெண்ணிடம் திருமணம் செய்து கொள்ளலாம் என தான் கூறியதாகவும், அதற்கு அப்பெண் மறுத்துவிட்டதாகவும் அந்த இளைஞர் போலீசாரிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் இளம் பெண்ணிடம் சண்டையிட்டுள்ளார்.

Arrested

இதைத் தொடர்ந்து வாடகை காரில் கேரளா நோக்கிச் சென்ற அந்த இளைஞர், செங்கல்பட்டில் இருந்து மீண்டும் அண்ணாநகர் வந்து அந்த இளம் பெண்ணிடம் பேசியுள்ளார். அந்தப் பெண் முடியாது எனக் கூறியதை அடுத்து நடந்து சென்றபோது, சாலையோரத்தில் டெம்போ ட்ராவலர் இயங்கிய நிலையில் இருப்பதை கண்ட அவர், அந்த வாகனத்தை திருடிக் கொண்டு கேரளா நோக்கி சென்றுள்ளார். அப்படித்தான் விமான நிலையம் அருகே சென்றபோது, வாகனத்தை நிறுத்திவிட்டு மீண்டும் இளம் பெண்ணிடம் பேசுவதற்காக பேருந்து மூலம் அண்ணாநகர் வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து தனது மொபைல் போனில் இருந்த இளம் பெண்ணின் படத்தைக் காட்டி தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கூறி கதறி அழுதுள்ளார். இதனையடுத்து அவரை கைது செய்து, போலீசார் சிறையில் அடைத்தனர்.