Vampire Serial Killer - கில்லர் காலின்ஸ் ஜூமைசி கலுஷா ட்விட்டர்
குற்றம்

கென்யாவை உலுக்கிய கொலைகள்... நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட Vampire Serial Killer! நடந்தது என்ன?

சண்முகப் பிரியா . செ

கென்யா தலைநகர் நைரோபியின் முகுரு என்ற பகுதியில் முன்பு குவாரியாக இருந்த ஒரு இடம், தற்போது குப்பை கிடங்காகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அப்பகுதியில் சில வாரங்களுக்கு முன்பு ஒன்பது பெண்களின் துண்டிக்கப்பட்ட உடல் பாகங்கள் கிடப்பது தெரியவந்தது. அவற்றைக் கைப்பற்றிய போலீசார் தீவர விசாரணை மேற்கொண்டனர்.

கென்யா சீரியல் கில்லர் காலின்ஸ் ஜூமைசி கலுஷா

குறிப்பாக அந்த உடல் பாகங்கள் யாருடையது? உடல் பாகங்கள் மட்டும் இருப்பதால் தலை எங்கே? இந்த ஒன்பது பெண்கள் எப்படிக் கொல்லப்பட்டிருப்பார்கள்? என்று பல கோணங்களில் கென்யா போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது குப்பையில் வீசப்பட்டிருந்த 9 பெண்களின் உடல் உறுப்புகளோடு ஒரு செல்போன் இருந்தது தெரியவந்தது.

அந்த செல்போனை ஆய்வு செய்ததில், 33 வயதான காலின்ஸ் ஜூமைசி கலுஷா என்ற நபர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை கண்டறிந்து கைது செய்த போலீசார் அவரது வீட்டில் சோதனை மேற்கொள்ளத் தொடங்கினர். உடல்கள் கிடைத்த குப்பைக் கிடங்கிற்கு அருகே உள்ள பாழடைந்த ரூமில்தான் ஜூமைசி கலுஷா வசித்து வந்துள்ளார்.

காலின்ஸ் ஜூமைசி கலுஷா

அங்கே காவல்துறையினர் சென்று பார்த்த போலீசார் மிரண்டு போயுள்ளனர். காரணம் வீடு முழுக்க​​ அரிவாள், ரப்பர் கையுறைகள், செல்லோடேப் ரோல்கள், நைலான் சாக்குகள் உள்ளிட்டவை இருந்துள்ளன. தொடர்ந்து ஜூமைசியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களும் வெளிவந்துள்ளன.

அதன்படி முதலில் பெண்களுடன் நெருங்கிப் பழகும் ஜூமைசி அவர்களை தன் வலையில் வீழ்த்தி வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். பின் அவர்களைக் கொலை செய்து உடல் உறுப்புகளை சிதைத்து, தனித் தனியாக வெட்டி அவற்றை தன் வீட்டின் அருகே மக்கள் குப்பை கிடங்காகப் பயன்படுத்தி வந்த இடத்தில் வீசியுள்ளார்.

காலின்ஸ் ஜூமைசி கலுஷா

இன்னும் கொடூரம் என்னவென்றால் இவர் கடந்த 2022ம் ஆண்டு தனது மனைவியைத்தான் முதன் முதலில் கொலை செய்துள்ளார். அப்போது தொடங்கி கடந்த 11ம் தேதி வரையில் மொத்தம் 42 பெண்களைக் கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இவரை அந்நாட்டு மக்கள் வேம்பையர் சீரியல் கில்லர் என்றே அழைத்து வருகின்றனர். இதில் கொலை செய்யப்பட்ட பெண்களின் உடல்கள் எல்லாமே சிதைந்த நிலையிலேயே கண்டறியப்பட்டுள்ளன.

சாக்குகளில் பெரும்பாலும் துண்டிக்கப்பட்ட கை, கால்கள் மற்றும் உடல் பகுதிகள் இருந்துள்ளன. மேலும் எந்த சடலத்திலும் புல்லட் காயங்கள் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். டிஎன்ஏ சோதனை மூலம் உடல்களைக் கண்டறியும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர். பெண்கள் மாயமானதாக அளிக்கப்படும் புகார்களை கென்ய போலீசார் உரிய முறையில் விசாரித்து இருந்தால் நிலைமை இவ்வளவு மோசமாகச் சென்றிருக்காது என்று கூறப்படுகிறது.

காலின்ஸ் ஜூமைசி கலுஷா

இதற்கிடையே கலுஷா நேற்றைய தினம் முதல் முறையாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ஜுமைசி கலுஷா தரப்பில் ஆஜரான ​​அவரது வழக்கறிஞர் ஜான் மைனா என்டேக்வா, “கலுஷா, காவல் அதிகாரிகளால் தவறாக நடத்தப்பட்டுள்ளார். அவர் கொடுத்த வாக்குமூலம் உண்மையானது அல்ல, நிர்பந்தத்தால் அப்படி கொடுத்துள்ளார்” என்று கூறியுள்ளார். இருதரப்பு வாதத்தை கேட்ட நீதிமன்றம், மேலும் 30 நாட்களுக்கு ஜுமைசியைக் காவலில் எடுத்து விசாரிக்க அந்நாட்டு காவல்துறைக்கு அனுமதி அளித்துள்ளது.