குற்றம்

கர்நாடகா டூ கோவை: லாரியில் கடத்தப்பட்ட ரூ. 1 கோடி மதிப்பிலானா குட்கா பறிமுதல்

kaleelrahman

வாகன சோதனையில் கர்நாடகத்தில் இருந்து கோவைக்கு கடத்தப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பண்ணாரி சோதனைச்சாவடியில் போலீசார் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குற்றத்தடுப்பு போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து மண்டல போதை பாக்கு குற்றத்தடுப்பு போலீசார் பண்ணாரி சோதனைச்சாவடிக்கு விரைந்து சென்று உள்ளூர் போலீசாருடன் சோதனையில் ஈடுபட்டனர்.

இரு மாநில எல்லையான கொள்ளேகால் ஹானூரில் இருந்து மக்காச்சோளம் ஏற்றிவந்த லாரி திம்பம் வழியாக கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது பண்ணாரி சோதனைச்சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது மக்காச்சோளம் மூட்டையில் மாறுபட்ட வாசனை வருவது கண்ட போலீசார், சந்தேகத்தின்பேரில் ஓட்டுநர் காந்தராஜ், உதவியாளர் ரமேஷிடம் விசாரணை நடத்தினர்.


அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தால் லாரியை சோதனையிட்டனர். அதில் மாக்காச்சோள மூட்டைக்குள் பான்மசாலா பாக்குகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஓட்டுநர் மற்றும் கிளீனரை கைது செய்து சத்தியமங்கம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

தொடர்ந்து லாரியில் இருந்த பொருட்களை இறக்கி சோதனையிட்டதில் ரூ. 1கோடி மதிப்பிலான 8.5 டன் தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓட்டுநர் காந்தராஜ், கிளீனர் ரமேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து ரூ. 1 கோடி மதிப்பிலான குட்காவை பறிமுதல் செய்தனர்.