அரசுப்பேருந்தில் தகராறில் ஈடுபட்ட இளைஞர் pt desk
குற்றம்

கள்ளக்குறிச்சி: “பெண்களுக்கு மட்டும்தான் இலவச பயணமா.. ஆண்களுக்கு இல்லையா?” – ஓட்டுநரை தாக்கிய இளைஞர்

PT WEB

செய்தியாளர்: ஆறுமுகம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் தானம் பகுதியிலிருந்து தியாகதுருகம் நோக்கிச் செல்லும் அரசு நகர பேருந்தில் ஏறிய, கல்சிறுநாகலூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் விஜய் என்பவர், டிக்கெட் எடுக்காமல் பயணித்துள்ளார். அவரிடம் நடத்துநர் குருநாதன் டிக்கெட் கேட்டபோது, “பெண்களுக்கு மட்டும்தான் இலவச பயணமா, ஆண்களுக்கு கிடையாதா” எனக்கேட்டு தகராறு செய்துள்ளார்.

ஓட்டுநரை தாக்கிய இளைஞர் கைது

இதனால் உளுந்தூர்பேட்டை அருகே ஸ்ரீதேவி பேருந்து நிறுத்தத்தில், விஜய்யை கீழே இறக்கிவிட்டுள்ளனர். ஆத்திரமடைந்த விஜய், ஓட்டுநர் சேட்டுவை கல்லால் தாக்கினார். இதில் ஓட்டுநரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. விஜய் மேலும், பேருந்து கண்ணாடியையும் கல்வீசி தாக்கினார். இதற்கிடையே அங்கிருந்தவர்கள் காயமடைந்த ஓட்டுநரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விஜய்யை கைது செய்துள்ளனர். ஓட்டுநருக்கு நடந்த சம்பவத்தை கண்டித்தும், பணிப்பாதுகாப்பு கேட்டும் கள்ளக்குறிச்சி பணிமனை முன்பாக பிற ஓட்டுநர்கள், நடத்துநர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.