குற்றம்

திரைப்பட பாணியில் தொழிலதிபரிடம் ரூ.86 லட்சம் மோசடி

rajakannan

இரிடியம் உலோகத்தை குறைந்த விலைக்கு தருவதாகக் கூறி சென்னை ராயபேட்டை தொழிலதிபரிடம் 86 லட்சம் ரூபாய் மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். 

ராயப்பேட்டையைச் சேர்ந்த‌ வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் ஆனந்தனிடம் கேரளா மற்றும் சென்னையைச் சேர்ந்த மூன்று பேர் தங்களிடமுள்ள பலகோடி ரூபாய் மதிப்புள்ள இரிடியத்தை 5 கோடி ருபாய்க்கு தருவதாக பேரம் பேசியிருக்கின்றனர். எனவே, ஆனந்தன் அவர்களுக்கு முன் பணமாக 86 லட்சம் ரூபாயை கொடுத்ததாகத் தெரிகிறது. 

பணத்தை வாங்கிக்கொண்டு அந்த மூன்று பேரும் தலைமறைவாகியுள்ள நிலையில், ஆனந்தன் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார். அதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு தலைமறைவாக இருந்த அந்த மூன்று பேரையும் கைது செய்ததோடு அவர்களிடமிருந்து 40 லட்சம் ரூபாய் மற்றும் இரிடியம் என்ற பெயரிலான போலி தகட்டையும் பறிமுதல் செய்தனர்.