Accused pt desk
குற்றம்

சென்னை: தனியாக வசிக்கும் மூதாட்டியிடம் 30 சவரன் நகை திருட்டு – வீட்டு பணிப்பெண் கைது

webteam

செய்தியாளர்: ஜெ.அன்பரசன்

சவுகார்பேட்டை சேர்ந்த வருதராஜலு (63) என்பவர் மாம்பலம் காவல் நிலையத்தில் கடந்த 22ஆம் தேதி புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில், “எனது உடன் பிறந்த சகோதரி அமிர்தவல்லி (83) தி.நகர் கோபால் தெருவில் தனிமையாக வசித்து வருகிறார். எனது சகோதரியை கவனித்துக் கொள்ள வளர்மதி மற்றும் சத்யா ஆகிய இரு பணிப்பெண்களை நியமித்திருந்தேன். அதன்பேரில் அவர்கள், கடந்த சில ஆண்டுகளாக என் சகோதரி வீட்டில் பணிபுரிந்து வருகின்றனர்.

Arrested

இந்த நிலையில் கடந்த 22-ம் தேதி எனது சகோதரியை பார்ப்பதற்காக நான் சென்றபொழுது, 8 மாதங்களுக்கு முன்பு வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 30 சவரன் நகை திருடு போனது தெரியவந்தது. எனது சகோதரியை கவனித்துக் கொள்வதற்காக பணியில் அமர்த்தபட்ட சத்யா மற்றும் வளர்மதி ஆகிய இருவர் மீதும் சந்தேகம் இருக்கிறது” எனத் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து மாம்பலம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மூதாட்டியை கவனித்து வந்த சத்யா (52) என்பவர் பீரோவில் இருந்த 30 சவரன் நகையை பல்வேறு காலகட்டங்களில் திருடியது தெரியவந்தது. இதனையடுத்து சத்யாவை கைது செய்த மாம்பலம் போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.