Accused pt desk
குற்றம்

தேனி: பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை - பெண் உட்பட நான்கு பேர் கைது

webteam

செய்தியாளர்: சுரேஷ்குமார்

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கூடலூர் 18-ஆம் கால்வாய் கரை பகுதியில் சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் கூடலூர் மேற்கு காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 18ஆம் கால்வாய் கரை மூன்றாவது பாலம் அருகே ஒரு பெண் உட்பட நான்கு பேர் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்தனர்.

Police station

அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவர்களிடம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் பதுக்கி வைத்திருந்த ரூபாய் 1 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பிலான சுமார் 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அவர்கள் கம்பம் கோம்பை ரோட்டை சேர்ந்த மாயி (46), கம்பம் மந்தையம்மன் கோயில் தெருவை சேர்ந்த விஸ்வநாதன் (22), கம்பம் கோம்பை ரோட்டைச் சேர்ந்த சின்னசாமி (62) மற்றும் கூடலூர் எல்லை தெருவை சேர்ந்த அமுதா (48) என்பது தெரியவந்தது. இதையடுத்து நான்கு பேரையும் கைது செய்துள்ள போலீசார், வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.