குற்றம்

சந்தேகத்தால் கைக்குழந்தையை அடித்துக் கொன்ற தந்தை

webteam

கடலூர் மாவட்டம் விருதாசலம் அருகே தாயின் கண் முன்னே ஒன்றரை மாத பெண் குழந்தையை தந்தை அடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் விருதாசலத்தை அடுத்த திருவரப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்மணி ராஜா. இவருக்கும் கும்பகோணத்தை சேர்ந்த ஜமுனா ராணிக்கு என்பவருக்கும் கடந்த ஆறு வருடங்களுக்கும் முன்பு திருமணம் நடைப்பெற்றது. இவர்களுக்கு ஹகின், சஞ்சனா என்ற இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் மூன்றாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. முதல் இரண்டு குழந்தைகளையும் விட இந்தக் குழந்தை மிகவும் அழகாக இருந்ததால் கண்மணி ராஜாவுக்கு மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு வந்துள்ளது. தினமும் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்துவந்தாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிய கண்மணி ராஜன் நன்றாக மது குடித்துவிட்டு வந்துள்ளார். வழக்கம்போல் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது ஜமுனா ராணி தனது ஒன்றரை மாத குழந்தையை கையில் வைத்துள்ளார். மனைவியிடம் இருந்து குழந்தையை பறித்த ராஜன். சற்றும் எதிர்பாராத விதமாக குழந்தையை தரையில் ஓங்கி அடித்தார். சம்பவ இடத்துலயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

கொலை செய்தது மட்டுமல்லாமல் குழந்தையை ஒரு சேலையில் சுற்றி வீட்டிற்கு பின்புறம் உள்ள தோட்டத்தில் புதைத்துள்ளார். இதனையடுத்து நேற்று காலை காவல் துறையினரிடம் இதுகுறித்து புகார் தெரிவித்துள்ளார். குழந்தையை கொன்று விட்டோம் என்ற பதட்டம் இல்லாமல் ஒன்றுமே தெரியாதது போல் பணிக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் ராஜா காத்திருந்தார். அங்கு சென்ற காவல்துறையினர் ராஜாவை கைது செய்தனர். 

இதனையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில், குழந்தை என் சாயலிலும் இல்லை எனது மனைவி சாயலிலும் இல்லை.எனவே தான் குழந்தை பிறந்ததும் சந்தேகமும் வந்தது. அவளது அம்மா இல்லத்திற்கு செல்லும் போது எல்லாம் தாமதமாகத்தான் வீட்டிற்கு வருவாள். குழந்தையை அவள் அம்மா இல்லத்தில் விட்டு விட்டு வருமாறு கூறினேன். எனது பேச்சை கேட்காமல் அந்த குழந்தையை வீட்டிற்கு கொண்டுவந்தாள்.குழந்தையை பார்க்கும் போதெல்லாம் ஆத்திரமாக வரும் இதனால் தான் தரையில் அடித்து கொன்றேன் எனக் கூறியுள்ளார்.