குற்றம்

பிரபல பாடகியின் மகளுக்கு பாலியல்தொல்லை: தேடப்பட்டு வந்த பாதிரியார் உள்பட 4 பேர் கைது

Veeramani

சென்னையில், பிரபல பாடகியின் 15 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், தலைமறைவாக இருந்த பாதிரியார் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே, சொத்துப் பிரச்னையின் காரணமாகவே தங்கை மற்றும் தங்கை கணவர் மீது பாடகி குற்றம் சுமத்தி வருவதாக, பாடகியின் தாயார் தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்தைச் சேர்ந்த பிரபல பின்னணி பாடகி ஒருவர், தனது 15 வயது மகளை சென்னையில் உள்ள தங்கையின் பராமரிப்பில் விட்டிருந்தார். தனது மகளை, உறவினர்கள் மூவரும், பாதிரியார் ஹென்றி என்பரும் கடந்த 8 ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளதாக பாடகி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில், கீழ்பாக்கம் மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், தலைமறைவாக இருந்த பாதிரியார் ஹென்றி, பாடகியின் சகோதரி, அவரது கணவர், உறவினர் ஒருவர் என மொத்தம் 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இதனிடையே, சொத்துப் பிரச்னைக்காகவே தங்கை மற்றும் தங்கையின் கணவர் மீது பின்னணி பாடகி பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பதாக, அந்த பாடகியின் தாயார் தெரிவித்துள்ளார்.