குற்றம்

தகாத வார்த்தைகளால் பேசியவரை கண்டித்த நபரின் காதை கடித்து துப்பியதால் பரபரப்பு

kaleelrahman

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் குடி போதையில் தகாத வார்த்தைகளால் பேசிக் கொண்டிருந்தவரை, தட்டிக் கேட்டவரின் காது  கடித்து துப்பப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராஜபாளையம் மலையடிப்பட்டியை அடுத்த எம்.கே.டி நகரை சேர்ந்தவர் மாரியப்பன். தச்சு பட்டறை தொழிலாளியான இவர் வசிக்கும் தொடர் வீட்டின் அருகே, கடந்த மாதம் ராமமூர்த்தி என்பவரது குடும்பம் குடி வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு புதியதாக குடி வந்த ராமமூர்த்தி என்பவர் குடி போதையில், வீட்டின் முன்பாக அவரது சகோதரர் மற்றும் தாயுடன் தகாத வார்த்தைகளால் பேசி சண்டையிட்டுள்ளார். பெண்கள் அதிகம் வசிக்கும் இடத்தில் தகாத வார்த்தைகள் பேசிய ராமமூர்த்தியை, மாரியப்பன் தட்டி கேட்டுள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் குடி போதையில் இருந்த ராமமூர்த்தி, மாரியப்பனின் இடது புற காதை கடித்து துப்பி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த மாரியப்பன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

குடி போதையில் இருந்த ராமமூர்த்தியையும், அவரது உறவினர்களையும் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அவர்களிடம் வடக்கு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இருவருக்குள் நடந்த சண்டையில் ஒருவரின் காது கடித்து துப்பப்பட்ட சம்பவம் மலையடிப்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.