குற்றம்

மதுபோதையில் தகராறு செய்து வந்த நபர் அடித்துக்கொலை - பழிக்கு பழியா ? என விசாரணை

webteam

ஆவடி அருகே மதுபோதை ஆசாமியை மர்ம நபர்கள் அடித்து கொலை செய்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை ஆவடி அடுத்த பூம்பொழில் நகரை சேர்ந்தவர் தாமோதரன். இவரது மகன் புஜ்ஜி என்கின்ற ரமேஷ் (30). இவருக்கு திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ளனர். மதுபோதைக்கு அடிமையான ரமேஷ் மீது அடிதடி, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இந்தநிலையில் ரமேஷ் தனது வீட்டின் அருகே உள்ள கறிக்கடையின் உள்ளே சடலமாக கிடந்தார்.

அவர் இறந்து கிடப்பதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் ஆவடி டேங்க் பேக்டரி காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரமேஷ் உடலை கைப்பற்றி ஆய்வு செய்தனர். ஆய்வில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டு இருப்பதை கண்டறிந்தனர். குடிபோதையில் அடிக்கடி தகராறில் ஈடுபடுவதை கொண்டிருந்த ரமேஷ், அவ்வாறு தகராறில் ஈடுபட்ட போது யாராவது அடித்துக் கொன்றிருக்கலாம் என சந்தேகித்துள்ளனர்.

அவரது உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கொலையாளிகள் யார் என்றும் தேடி வருகின்றனர்.