குற்றம்

’தினமும் இப்படி குடிச்சிட்டு வர்றீயே’ - சண்டையிட்ட மகள்களை போதையில் அடித்துக் கொன்ற தந்தை!

kaleelrahman

அதீத குடிபோதையில் இரண்டு சிறுமிகளை கட்டையால் கொடூரமாக அடித்துக் கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டார்.

காஞ்சிபுரம் அடுத்த ஒரகடம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் எந்த ஒரு வேலைக்கும் செல்லாமல் தினசரி மது அருந்திவிட்டு வீட்டில் வந்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் இவருடைய தொல்லை தாங்காமல் 14 வயது சிறுமி நதியா தீயிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைத் தொடர்ந்து எப்போதும் மது போதையில் இருக்கும் கோவிந்தராஜ், தனது குடும்பத்தாருடன் தொடர்ச்சியாக சண்டையிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் கோவிந்தராஜ் மனைவி வேலைக்குச் சென்றிருந்த நிலையில், இவருடைய மூத்த மகள் நந்தினி (16) மற்றும் தீபா (9) ஆகிய இருவரும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது மது போதையில் வீட்டிற்கு வந்த கோவிந்தராஜுடன் தினமும் இப்படி குடித்துவிட்டு வருகிறாயே என இரு மகள்களும் சண்டையிட்டுள்ளனர். இதனால் கோபமுற்ற கோவிந்தராஜ், கட்டையால் இரு மகள்களையும் கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த இரு மகள்களும் உயிரிழந்தனர்.

இதைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் கோவிந்தராஜை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மது போதையில் தனது இரு மகன்களையும் அடித்துக் கொன்ற தந்தையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.