குற்றம்

காதலிக்க வேண்டாம் அவன் நல்லவனில்லை – தங்கைக்கு அறிவுரை கூறிய அண்ணனுக்கு கத்திக்குத்து

webteam

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியின் வீடு புகுந்து தகராறில் ஈடுபட்டு கத்தியால் தாக்கிய இளைஞர் குடும்பத்துடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்வம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூர் கள்ளிகுப்பம் கங்கை நகர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி, சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு மகளிர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.எஸ்.சி படித்து வருகிறார். இந்த நிலையில் இவரது சகோதரரான மனோஜ் குமாரின் நண்பரும் கல்லூரியில் ஒன்றாக படித்தவருமான பட்டாபிராமை சேர்ந்த மதியழகன் என்பவர் மனோஜ் குமாரின் தங்கையை காதலித்து வந்துள்ளார்.

இதனை தெரிந்து கொண்ட மனோஜ், மதியழகன் நல்லவன் கிடையாது அவனிடம் பேசாதே என்று சகோதரியிடம் அறிவுரை கூறியுள்ளார். இதனால் கடந்த மூன்று மாதமாக பேசாமல் அந்தப் பெண் மதியழகனை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த மதியழகன் தனது தாய் தந்தை என குடும்பத்துடன் மனோஜ் குமாரின் வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளனர்.

தகராறு முற்றிய நிலையில், அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனோஜ் குமாரை சரமாரியாக வெட்டி வீட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து மனோஜ் குமாரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இது தொடர்பாக மனோஜ் குமார் அளித்த புகாரின் பேரில் தாக்குதலில் ஈடுபட்ட மதியழகன், அவரது தந்தை ராஜ்குமார், தாயார் நிறைமதி மற்றும் ஹரி ஆகிய நான்கு பேரை கைது செய்த அம்பத்தூர் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் குற்றம் செய்ததை ஒப்புக்கொண்டதை அடுத்து நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவம் அம்பத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.