Accused pt desk
குற்றம்

தருமபுரி: காதல் விவகாரத்தில் இளைஞர் படுகொலை - பெண்ணின் இரட்டை சகோதரர்கள் உட்பட 4 பேர் கைது

webteam

செய்தியாளர்: சே.விவேகானந்தன்

தருமபுரி அடுத்த இலக்கியம்பட்டியில் புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலில் மாஸ்டராக தருமபுரி வி.ஜெட்டி அள்ளியை சேர்ந்த முகமது ஆசிக் (25) என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு ஓட்டலில் பணியில் ஈடுபட்டிருந்த போது, ஓட்டலுக்கு 4 பேர் வந்துள்ளனர். அப்போது அவர்களில் 2 பேர் கத்தியால் ஆசிக்கை குத்திவிட்டு தப்பியோடியுள்ளனர்.

Accused

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகர காவல் துறையினர், முகமது ஆசிக்கை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முகமது ஆசிக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.ஸ்டீபன் ஜேசுபாதம், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். பின்னர் மோப்பநாய் ரேடவ் வரவழைக்கப்பட்டு கொலையாளிகள் குறித்த தடயங்களை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து ஓட்டலில் உள்ள சிசிடிவி பதிவுகளை வைத்து கொலையாளிகளை அடையாளம் கண்ட காவல் துறையினர், தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், முகமது ஆசிக் ஓமலூர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அந்தக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்ணின் சகோதரர்கள் முகமது ஆசிக்கை கண்டித்ததுள்ளதாகவும் தெரிகிறது. இதனால், இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது ஆசிக் காதலித்த பெண்ணின் சகோதரர்களான ஜன ரஞ்சன், ஜன அம்சபிரியன் இரட்டை சகோதரர்கள் என்பது தெரியவந்துள்ளது.

Arrested

இதையடுத்து செட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரர்கள் ஜன ரஞ்சன், ஜன அம்சபிரியன், மற்றும் நண்பர்கள் கௌதம், பரிதி வளவன் ஆகிய நான்கு பேரையும் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காதல் விவகாரத்தில் பட்டியலின இளைஞர்கள் கொலை செய்யப்படும் சம்பவங்கள் நடந்து வரும் நிலையில், பட்டியலின இளைஞர்களே தங்களது தங்கையை காதலித்ததற்காக இஸ்லாமிய இளைஞரை படுகொலை செய்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த கொலை சம்பத்திற்கு கண்டனங்களும் எழுந்துள்ளது.