Accused pt desk
குற்றம்

தருமபுரி: நண்பனை அடித்துக் கொலை செய்து விட்டு நாடகமாடிய சக நண்பர்கள் - இருவர் கைது

webteam

செய்தியாளர்: சே.விவேகானந்தன்

தருமபுரி மாவட்டம் பொம்மிடி அடுத்த ஜங்காலஹள்ளியை சேர்ந்த மணிகண்டன் (35). கூலித் தொழில் செய்து வரும் இவர், கடந்த 21ம் தேதி அதே பகுதியை சேர்ந்த மாயக்கண்ணன், கேசவன் ஆகிய நண்பர்களுடன் மது குடித்துவிட்டு ஒட்டுபள்ளம் - ஜங்காலஹள்ளி சாலையில் வந்துள்ளனர். அப்போது அங்கு மற்றொரு நண்பர் அறிவழகன் என்பவர், தனது மனைவியுடன் மணிகண்டன் தொடர்பு வைத்திருந்ததை அறிந்து, அவர் மீது ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

Police station

இதையடுத்து ‘என் மனைவியுடன் ஏன் பழகுகிறாய்?’ எனக்கேட்டு மணிகண்டனை இரும்புக் கம்பியால் தலையில் தாக்கியுள்ளார். இதில், படுகாயம் அடைந்த மணிகண்டனை அறிவழகன் மற்றும் மாயக்கண்ணன் ஆகியோர் விபத்தில் அடிபட்டது போல் நாடகமாடி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதனை தொடர்ந்து மணிகண்டன், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு மணிகண்டன் 30-ந் தேதி, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து பொம்மிடி காவல் துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து தனிப்படை காவல் துறையினர் தலைமறைவான மாயக்கண்ணன், அறிவழகன் ஆகியோரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் ஈரோட்டில் பதுங்கி இருந்த மாயக்கண்ணனை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். இதனை அறிந்த அறிவழகன் அரூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். தொடர்ந்து தலைமாறைவாக உள்ளவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.